இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்ற அழைக்கப்படுபவர், ராகுல் டிராவிட். டெஸ்ட் போட்டிதான் டிராவிட்டின் பலம் எனச் சிலர் நினைக்கலாம். ஆனால் ஒருநாள் போட்டியிலும் 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர் டிராவிட். ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு வடிவிலான கிரிக்கெட்டிலும் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த ஒருசில கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர் டிராவிட்.

47 வயதாகும் ராகுல் டிராவிட் 1996-ம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருந்தார். 2011 செப்டம்பர் மாதம் வரை 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்களுடன் 10,899 ரன்கள் அடித்துள்ளார் டிராவிட். இவரின் சராசரி ரன் ரேட் 39.16 ஆகும்.

1996-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 2012-ம் ஆண்டு ஜனவரி வரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சதங்களுடன் 13,288 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 52.31 ஆகும். ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே இவர் விளையாடி இருக்கிறார்.

இத்தனை பதக்கங்கள் அவரின் வரலாற்றில் பொறிக்கப்பட்டிருந்தாலும்கூட, இடையிடையே அவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்பது மறுப்பதற்கில்லை. அந்தவகையில் 1998-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். சுமார் ஒரு வருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

தனது அந்த நீக்கம் குறித்து, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு தற்போது பேட்டியளித்திருக்கிறார். அதில், `அணியிலிருந்து நீக்கப்பட்டபோது, கிரிக்கெட் வாழ்க்கையே பாதுகாப்பற்றதுபோல' தான் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார் டிராவிட்.

மேலும் ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘கிரிக்கெட்டில் பாதுகாப்பற்றது என்பதை, 1998-ம் ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிகழ்வின்போது அதை உணர்ந்தேன். ஒரு வருடமாக அணியில் இல்லாமல் போனபின்பு, மீண்டும் அணிக்குத் திரும்பக் கடுமையாகப் போராடினேன். நான் சிறுவயதிலிருந்து டெஸ்ட் போட்டிக்காகவே தயார் செய்யப்பட்ட நபர் என்பதால், ஒருநாள் போட்டிக்கு நான் சிறந்தவனா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இதனாலேயே குறிப்பிட்ட பாதுகாப்பற்ற தன்மை எனக்கு இருந்தது.

நானும் ஏற்கனவே டெஸ்ட் வீரராகவும், டெஸ்ட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பந்தைத் தரையில் அடிக்கவும்தான் விரும்பினேன். அதேபோல ஆட்டத்திலும், பந்தை மேலே தூக்கிய அடிக்கக்கூடாது, பயிற்சியாளர் போன்றவற்றைத்தான் விரும்பினேன். இதனாலேயே ஒருநாள் போட்டிக்கான திறமை எனக்குள் ஒளிந்திருந்தது போல எண்ணினேன். அதேபோல ஒருநாள் போட்டியில் என்னால் திறம்படச் செய்ய முடியுமா என்ற கவலை எனக்கு இருந்தது.

நீக்கப்பட்ட சமயம் மட்டுமன்றி, எனக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை பல கட்டங்களிலிருந்தது. இளம் கிரிக்கெட் வீரராக வளரும்போது, இந்திய அணியில் இடம் பிடிப்பது எளிதான காரியம் இல்லை. ஏராளமான போட்டிகள் இருக்கும். நிறையத் திறமைசாலிகள் நம்மை சுற்றி இருப்பார்கள். நான் வளர்ந்து வரும் நேரத்தில் ரஞ்சி கோப்பையும், இந்திய அணியும் மட்டுமே உண்டு. இப்போதுள்ளது போல ஐபிஎல் கிடையாது. ரஞ்சியில் பணமும் குறைவாகத்தான் கிடைக்கும் என்பதால் என்னுடைய சவாலும் மிகப்பெரிதாக இருந்தது.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இதில் விளையாட்டு சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை எனில், அதை விட்டுவிட்டு அவ்வளவு எளிதாகவெல்லாம் வெளியே வரமுடியாது. மீறி வந்தாலும், என்ன செய்யவென தெரியாது. இதெல்லாம், மனதுக்குள் மிகப்பெரிய கேள்வியையும் பயத்தையும் தரும். இப்படியான நேரத்திலெல்லாம் கூட எனக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களிடம் உரையாடும்போது, இந்த மாதிரியான எதிர்மறை எண்ணங்கள் எல்லோருக்குமானது என என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதேபோல எல்லோருக்கும் சில பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கும் என்பதையும் உணர்ந்தேன்’’ என்று கூறியிருக்கிறார்.

- பெ. மதலை ஆரோன்.