சூறை காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் மும்பை, குஜராத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டு டவ் தே புயல் கரையைக் கடந்தது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் காரணமாக, மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டிய பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. முக்கியமாக கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது.

அதே நேரத்தில், இந்த டவ் தே புயல், வடக்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்துச் சென்றது. அத்துடன், இந்த புயலானது, மும்பை கடல் பகுதி வழியாக சென்று இன்று அதிகாலை நேரத்தில் குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. மேலும், இந்த டவ் தே புயல் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதே நேரத்தில், இந்த டவ் தே புயலை எதிர்கொள்ளவதற்கா, குஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. குறிப்பாக, பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அதி தீவிரபுயல் நேற்று அதிகாலை மேலும் தீவிரமடைந்து காணப்பட்டது. இவற்றுடன், புயல் வேகமாக நகர தொடங்கியது. இதன் காரணமாக ஒரு நாள் முன்னதாகவே நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் - மாகுவா இடையே கரையை நெருங்கியது. முன்னதாக மும்பை கடல் பகுதியில் 145 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நகர்ந்து சென்றது.

இதனால், மும்பை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை கொட்டி தீர்க்க தொடங்கியது. குறிப்பாக, மும்பையில் நேற்று 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசியது. இதற்கு நடுவில், இடைவிடாத மழையும் பெய்துகொண்டு இருந்தது. இதன் காரணமாக, மும்பை நகரமே நிலைகுலைந்து போனது.

அத்துடன், இந்த புயல் கரையைக் கடக்க 2 மணி நேரத்துக்கு மேல் ஆகியது. புயல் காரணமாக மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. அதே போல், மும்பை அருகே உள்ள இதர கடலோர மாவட்டங்களிலும் சுழன்று அடித்த காற்றுடன், கன மழையும் கொட்டி தீர்த்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.

மிக முக்கியமாக, குஜராத் மாநிலத்தில் புயல் கரையை கடக்கும்போது, அங்கு கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று, பெருமழை காரணமாக பல இடங்கள் உருக்குலைந்து போனது. பேய் மழை காரணமாக, ஏராளமான மின் கம்பங்களும், மரங்களும் அப்படியே சாய்ந்தன. குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

அதே நேரத்தில், டவ்தே புயலானது வலுவிழந்து, டையூ அருகே மையம் கொண்டிருந்த நிலயில், அதிகாலை நேரத்தில் கரையை கடந்தது. 

இதனிடையே, டவ் தே புயல் காரணமாக கர்நாடகத்தில் 121 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.