தமிழ் திரைத்துறையைத் தொடர்ந்து கர்நாடக திரைத்துறையிலும் “ஹிந்திதெரியாதுபோடா” என்ற ஹிந்தி எதிர்ப்பு குரல் போர்க்கொடி தூக்கி நிற்கிறது. 

பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றது முதல் தமிழகத்தில் மெல்ல மெல்ல ஹிந்தியை திணித்து வந்ததாக கூறப்பட்டது.

தமிழத்தை பொறுத்த வரை முதலில் “தமிழகத்தில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வேத் துறை, அஞ்சல் துறை, பி.எச்.இ.எல். நெய்வேலி அனல் மின் நிலையம்; திருச்சி, ஆவடி, அரவங்காடு போன்ற இடங்களிலுள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற மத்திய அரசின் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் முதலியவற்றிலும், இந்திய அரசு திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வட மாநிலத்தவர்களை வேலையில் சேர்த்து வருகிறது. 
 
சொந்தத் தாய் மண்ணிலேயே வேலைக்குத் தகுதியான தமிழர்கள் ஏதிலிகள் (Refugees) போல் ஒதுக்கி வைக்கப்பட்டு, மேற்கண்ட நிறுவனங்களில் வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதுதல், வினாவிடைத் தாள்களை முன்பே வெளியில் பெற்று தேர்வெழுதுதல் போன்ற பல்வேறு மோசடிகள் வட நாட்டுத் தேர்வு மையங்களில் நடந்து வருகின்றன” என்று, தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அதிகாரிகள் மீது ஹிந்தி திணிக்கப்பட்டு வருவதாகவும், ஹிந்தி தெரியாத அதிகாரிகளுக்கு ஹிந்தி பிரிவில் பொறுப்புகள் மற்றும் பணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதனால், உச்சக்கட்ட ஹிந்தி திணிப்பில் தமிழகம் சிக்கித் தவித்து வருவது அவ்வப்போது தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் இருந்தன.

இதனையடுத்து, ஒரு வார இதழில் இயக்குனர் வெற்றிமாறன், “ஹிந்தி தெரியாத தான் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டேன்” என்று பேட்டி அளித்திருந்தார். இதனால், கொந்தளித்த தமிழகம், “ஹிந்திதெரியாதுபோடா” என்ற, ஹேஷ்டேக்கை கடந்த வாரம் டிரெண்டாக்கியது. இது, இந்திய அளவில் டிரெண்டாக்கிய நிலையில், இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படத்தியது.

அப்போது, “ஹிந்திதெரியாதுபோடா” என்ற, ஹேஷ்டேக்கை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக, தமிழ் திரை உலகில் பலர் இந்திக்கு எதிராக குரல் கொடுத்தனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு உள்ளிட்டோர் இந்த டிரெண்டில் அதிரடியாக களம் இறங்கினர்.

அதன்படி, யுவன் சங்கர் ராஜா அணிந்திருந்த டி சர்ட் ஒன்றில், “திருவள்ளுவர் படத்துடன், நான் தமிழ் பேசும் இந்தியன்” என்று, அச்சிடப்பட்டிருந்தது. 

யுவன் சங்கர் ராஜா உடன் நடிகர் ஸ்ரீரீஷ் உடன் நின்றார். அவர் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்திருந்தார். அதில், ஹிந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக, நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவியும் இதே ஜோடி டி- சர்ட்களை அணிந்து புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

குறிப்பாக, “ஹிந்திதெரியாதுபோடா” என்ற ஹேஸ்டேக்கை தேசிய அளவில் நெட்டிசன்கள் டிரெண்டிங் ஆக்கி வந்த நிலையில், இதற்கு சம்மந்தமே இல்லாமல் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்வினையாற்றி வந்தனர். இதுவும், விவாத பொருளாக மாறியது. 

இந்நிலையில் தான், தமிழ் திரைத்துறையைத் தொடர்ந்து கர்நாடக திரைத்துறையிலும் “ஹிந்திதெரியாதுபோடா” என்ற ஹிந்தி எதிர்ப்பு குரல் தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளது.

முக்கியமாக, பாஜக தலைமையிலான மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடக வரைபடத்துடன் கூடிய கருப்பு நிற டிசர்ட்டில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான வாசகம் அடங்கிய டிசர்ட்டை அணிந்து இருக்கிறார். 

அத்துடன், இந்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ், “என்னால் எந்த மொழியிலும் பணியாற்ற முடியும். எனது கற்றுக் கொள்ளும் திறன் என்பது என்னுடைய விருப்பத்துக்குரியது மட்டுமே. எனது பெருமை எனது தாய்மொழி தான். எங்களிடம் ஹிந்தியைத் திணிக்காதே” என்றும், அவர்  குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து, கன்னட நடிகர்கள் சிவராஜ் குமார், தனஞ்செய் ஆகியோரும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து, “ஹிந்திதெரியாதுபோடா” வுக்கு ஆதரவாக தங்களது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். 

நடிகர் சிவராஜ்குமார் தனது டி ஷர்ட்டில் “கன்னடம் பேசும் இந்தியன் நான்” என்றும், தனஞ்செய் “கன்னட நாட்டில் கன்னடமே தேசிய மொழி” என்றும், தாங்கள் அணிந்துள்ள டீ சர்ட்டுடன் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், “ஹிந்திதெரியாதுபோடா” பிரச்சரமும், ஹிந்தி எதிர்ப்பு குரலும், தமிழ் திரைத்துறையைத் தொடர்ந்து கர்நாடக திரைத்துறையிலும் தற்போது எழுந்துள்ளது. இதனால், தமிழகத்தில் பாஜகவினர் எதிர்வினை ஆற்றியது போல், கர்நாடக மாநிலத்தில் உள்ள பாஜகவினர் எதிர்வினை ஆற்றுவார்களா என்றும் இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இதனால, “ஹிந்திதெரியாதுபோடா” என்ற புரட்சித் தீ, தமிழ்நாட்டை கடந்து கர்நாடக மாநிலத்தில் பற்றி எரியத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.