“ராஜபக்சேவின் ஆதரவாளராக இருக்கும் வெங்கடேஷ்வரன், தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக விதிகளை மீறி நியமிக்கப்பட்டுள்ள
நிலையில், அவர் தூத்துக்குடி அனல்மின் நிலையம் மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டது பல்வேறு கேள்விகளையும்,  சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக வெங்கடேஷ்வரன் என்பவர், ராஜபக்சேவால் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி நேரடியாக நியமிக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாட்டில் உள்ள முக்கிய வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார். 

அதன் படி, இந்தியாவிற்கும் வருகை தந்த  இலங்கை துணை உயர் ஆணையரான வெங்கடேஷ்வரன், தென்னிந்தியாவின் முதல் விசிட்டாக கேரளா மாநிலத்திற்குச்
சென்று உள்ளார். அங்கு, கேரள முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இலங்கை துணை உயர் ஆணையரான வெங்கடேஷ்வரன், தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்துள்ளார். அதன் பிறகு, காரைக்கால் துறைமுகத்திற்குச் சென்று அவர் பார்வையிடவும் செய்திருக்கிறார்.

அதாவது, இந்தியாவுடன் சீனா, தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனால், எல்லையில் தொடர்ந்து ராணுவ வீரர்களைக் குவித்து வருவதும்,
அவ்வப்போது பின் வாங்குவதுமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு இந்தியா - சீனா இடையே திடீரென்று போர் மூளும்
அபாயமும் ஏற்பட்டது. இதனால், இந்தியா - சீன எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டன. இதனையடுத்து, சீனா சற்று பின் வாங்கினாலும், அப்போது
இந்தியாவை சுற்றி வலைக்கும் வேலைகளையும் தொடர்ந்து செய்து வருவதாக அப்போதே செய்திகள் வெளியானது, 

இது மட்டுமில்லாமல், தமிழகத்தின் மிக அருகில் இலங்கை கடல் பகுதியில் சீனா, தனது துறைமுகத்தைப் புதிதாகக் கட்டமைத்து வருகிறது. 

குறிப்பாக, இலங்கையைத் தன்வசப்படுத்தி சீனா, இந்தியாவிற்கு எதிராக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டு வருவதாகவும் தொடர்ந்து செய்திகள்
வெளியான வண்ணம் உள்ளன. 

அதன் ஒரு பகுதியாகத் தான், இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் வெங்கடேஷ்வரனை,
இந்தியாவிற்கான இலங்கை தூதராக நியமனம் செய்த இலங்கை அரசு, தமிழகத்தில் நடக்கும் பல்வேறு செயல்களை உளவு பார்ப்பதற்காகவே, இலங்கை அரசு
திட்டமிட்டே அவரை தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அனுப்பி உள்ளதாகவும் தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டத் தொடங்கி உள்ளனர். 

இதில், “ராஜபக்சேவின் ஆதரவாளராக இருக்கும் வெங்கடேஷ்வரன், காரைக்கால் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டது ஏன்?” என்பது தான், தமிழ் அமைப்புகள்
மிக முக்கியமாக முன் வைக்கும் கேள்வியாக உள்ளது.

அதற்கு காரணம், தமிழகத்தில் இருக்கும் தூத்துக்குடி துறைமுகம் மற்றும்  காரைக்கால் துறைமுகம் சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அல்லது போட்டியாகப்  
பார்க்கப்படுகிறது என்ற ஒரு சொல்லும் உண்டு. 

இதன் காரணமாகவே, “இந்த 2 துறைமுகங்களின் கட்டமைப்புகளைப் பலவீனப்படுத்த பல்வேறு முயற்சிகளில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், இதன் ஒரு பகுதியாகச் சீனாவின் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள இலங்கையைச் சேர்ந்த ஒரு அதிகாரி, காரைக்கால் துறைமுகத்தில் ஆய்வு நடத்துவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால்” என்றே, தமிழ் ஆர்வலர்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். 

“தமிழகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காரைக்காலில் உள்ள துறைமுகத்தில் என்ன கட்டமைப்பு இருக்கிறது? என்பதை முழுமையாகப் பார்த்து, இலங்கைக்கு உளவு
பார்த்துச் சொல்வதற்காகவே இலங்கை தூதர் வெங்கடேஷ்வரன் நியமனம் செய்யப்பட்டார் என்றும், அதன் காரணமாக அவர் தமிழகம் வந்திருக்கிறார்” என்றும்,
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்று குவித்த சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரன் ஆகியோரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டவர் தான், இந்தியாவிற்கான இலங்கை
தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் இந்த வெங்கடேஷ்வரன்.

இந்தியாவிற்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் வெங்கடேஷ்வரன் தொடர்பான நியமனம் குறித்துக் கூறிய சென்னை இலங்கை தூதரக அதிகாரிகள்,
“இது வரை இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் 'Srilanka Foreign Service' நியமனம் மூலமே தேர்வு செய்யப்பட்டார்கள் என்றும், கடந்த காலங்களில்
தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் தமிழர்களாக மட்டுமே இருந்தார்கள் என்றும், அதனால் அவர்கள் யாரும் ராஜபக்ஷே அரசுக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறி
ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்றும், குறிப்பிட்டுள்ளனர்.

“இந்த பதவிக்கு மிகவும் தகுதியான தமிழர்கள் இருந்த போதிலும், 'Srilanka Foreign Service' தகுதியும் இல்லாத நபரை, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறி  இந்தியாவிற்கான இலங்கை தூதராக வெங்கடேஷ்வரன் நியமிக்கப்பட்டிருப்பதற்குப் பின்னால், பல ரகசியங்கள் மற்றும் பல உள்ளடி வேலைகள் இருப்பதாகவும், இந்த
நியமனம் மூலம் அரசின் ரகசியங்களை ராணுவ உளவாளியான வெங்கடேஷ்வரன் மூலமாகத் தெரிந்து கொள்ள இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது” என்றும்,
அவர்கள் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

காரைக்கால் துறைமுகத்தில் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து, சமீபத்தில் திருச்சியில் உள்ள 'Kothagiri sugars and Chemicals Ltd' என்ற நிறுவனத்திற்குச் சென்ற இலங்கை தூதர் வெங்கடேஷ்வரன், அந்த நிறுவனத்தின் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு இருக்கிறார். 

அத்துடன், திருச்சியில் உள்ள இந்த நிறுவனத்திற்குச் சென்று பார்வையிட்டது தொடர்பாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ள இலங்கை தூதர் வெங்கடேஷ்வரன், “இலங்கை அதிபர் வழிகாட்டுதலின் பேரில் இந்த நிறுவனத்தைப் பார்வையிட வந்ததாக” அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

இதனால், “திருச்சியில் உள்ள நிறுவனத்திற்கும், இந்தியாவிற்கான இலங்கை தூதருக்கும் என்ன சம்பந்தம்?” என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

அதே போல், சமீபத்தில் கோயமுத்தூரில் உள்ள 'நேரு வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கும்" சென்று வந்திருக்கிறார் இலங்கை தூதர் வெங்கடேஷ்வரன். இதனால், “இலங்கை துணை ஆணையருக்கும் கோவையில் உள்ள பள்ளிக்கும் என்ன சம்பந்தம்?” என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

இப்படியாக, தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்று அங்குள்ள தகவல்களைப் பெற்று இலங்கைக்கு உளவு சொல்கிறார் என்கிற குற்றச்சாட்டும் வெங்கடேஷ்வரன்
மீது தற்போது தமிழ் ஆர்வலர்கள் சுமத்தப்படுகிறது.

மிக முக்கியமாக, தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் வெங்கடேஷ்வரன் ஆய்வு நடத்தியிருக்கிறார் என்றும், அங்குள்ள முட்டியாரா அனல் மின் நிலையத்திற்கு நேரில் சென்ற வெங்கடேஷ்வரன், அங்கு நடைபெற்று வரும் அன்றாட பணிகளைப் பார்வையிட்டு, அங்குள்ள அதிகாரிகளிடம் அவர் ஆலோசனையும் நடத்தி இருக்கிறார் என்கிற தகவலும் தற்போது புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி உள்ளன. 

ஏற்கனவே, “தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சீனாவின் அச்சுறுத்தல் இருக்கும் சூழலில், சீனாவின் நட்பை அதிகம் விரும்பும் நாடாக உள்ள இலங்கையின் துணை
உயர் ஆணையர் அதுவும் ராஜபக்சேவின் ஆதரவாளராக இருக்கும் வெங்கடேஷ்வரன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஏன் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும்?”
உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தமிழ் ஆர்வலர்கள் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.