“திருமணம் ஆனால் என்ன? மணப்பெண் படிப்பைத் மேலும் தொடரலாம்” என்று, கிராம பஞ்சாயத்தில் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு தான் தற்போது வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் கங்கானியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோர்காட் கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமாருக்கும், அங்குள்ள ஜஹாங்கிரா கிராமத்தைச் சேர்ந்த நேகா குமாரிக்கும் இடையே, கடந்த ஜூன் மாதம் அவர்களது பெற்றோர் முன்னிலையில் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணம் செய்துகொண்ட மணப்பெண் நேகா குமாரி, 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார்.

அத்துடன், புதுமண பெண் நேகாவிற்கு, 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசை இருந்து உள்ளது. இது தொடர்பாக, அவரது பெற்றோரிடம் நேகா, எவ்வளவோ சொல்லியும், அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. “படிப்பைத் திருமணத்திற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறிவிட்டனர்.

பின்னர், திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டிற்கு சென்ற நேகா, “நான் தொடர்ந்து படிக்க வேண்டும்” என்று, தனது ஆசையைக் கூறியிருக்கிறார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த கணவன் மற்றும் அவரது பெற்றோர், படிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால், ஏமாற்றம் அடைந்தது போல் பீல் பண்ணிய மணப்பெண் நேகா, கணவனின் வீட்டை விட்டு வெளியேறி, அங்கிருந்து பாட்னாவுக்கு சென்று விட்டார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இளம் பெண் நேகாவின் தந்தை குருதேவ், “என் மகளை யாரோ கடத்தி விட்டனர்” என்று கூறி, அங்குள்ள அஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இந்த விசயம், உள்ளூர் தோழிகள் மூலமாக இளம் பெண் நேகாவுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தனது ஊரான கங்கானியா பஞ்சாயத்துத் தலைவர் தாமோதர் சவுத்ரியை சந்தித்து மணப்பெண் நேகா, தனது படிப்பு ஆசை பற்றி முறையிட்டு உள்ளார்.

அப்போது, உண்மையைப் புரிந்துகொண்ட கங்கானியா பஞ்சாயத்துத் தலைவர் தாமோதர் சவுத்ரி, உடனடியாக ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி, மணமகன் மற்றும் மணமகள் என இரு வீட்டார் பெற்றோரையும் பஞ்சாயத்துக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். 

அந்த பஞ்சாயத்தில் புதுமணப்பெண் நேகா ஆஜராகி, “நான் ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல ஆசைப்படுகிறேன். ஆனால், இதனை ஏற்க என் கணவர் மறுத்துவிட்டார். அதனால், என் கணவரைப் பிரிய அனுமதிக்க வேண்டும்” என்று, அவர் அதிர்ச்சியூட்டும் விதமாகப் பேசி உள்ளார்.

இதனைக் கேட்ட இருவீட்டு பெற்றோர்களும், அந்த பெண்ணின் கணவரும் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், எதிர் வாதம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, பஞ்சாயத்தார் இரு தரப்பிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும், அது பலன் அளிக்க வில்லை. இதனால், இளம் பெண்ணின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பஞ்சாயத்தார், “இளம் பெண் நேகா படிப்பைத் தொடர கணவனைப் பிரியலாம்” என்று, அதிரடியாகத் தீர்ப்பு வழங்கினார்கள்.

குறிப்பாக, “இளம் பெண் நேகாவை, இது தொடர்பாக இரு தரப்பினரும் தொந்தரவு செய்யக் கூடாது” என்று, கட்டளையிட்டு, இரு வீட்டு பெற்றோரிடம் இருந்தும் பஞ்சாயத்தார் எழுதி வாங்கிக் கொண்டனர்.

கிராமப் பஞ்சாயத்தினர் பெண்ணின் படிப்புக்குச் சாதகமாக வழங்கிய தீர்ப்பு, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வரும் நிலையில், இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.