கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் இருக்கும் போட்டியில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பது பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்தான். இருப்பினும், ரஷ்யா இந்த விஷயத்தில் இதை ஒப்புக்கொள்வதாக இல்லை. தாங்கள்தான் முன்னணியில் இருப்பதாகத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையைச் செய்யும் முன்பே, கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவம் சார்பில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தனது சோதனையின் முடிவில், மனிதர்கள் மீது வெற்றிகரமாகச் சோதனை செய்து முடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்து இருக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியைச் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த நாட்டு ராணுவத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக்காக அந்த நாட்டு ராணுவம், தனது ராணுவ வீரர்களை அனுப்பி இருந்தது. அவர்கள் மீதுதான் ரஷ்யாவின் பெயர் வைக்கப்படாத அந்த கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டது. இந்த மனித சோதனையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வெற்றி அடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும், மருந்து பெரிய அளவில் பயன் அளித்து உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையைச் செய்யும் முன்பே, கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. 
 
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் ருசிலான் திசாலிகோவ் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ``மக்களின் மீது இதை பயன்படுத்தப் போகிறோம்" என்று அவர் அறிவித்துள்ளார்.

இருப்பினும் ரஷ்யாவின் இந்த மருந்துக்கு, பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக, `எப்படி முழுமையாகச் சோதனை செய்யாமல் மனிதர்களுக்கு இதை அளிக்கலாம். இது பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்யாமல் எப்படி மக்களுக்குக் கொடுக்க முன்வரலாம். ஏன் அரசு இவ்வளவு அவசரப்படுகிறது. இது பெரிய ரிஸ்க்' என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இன்னொருபக்கம், ரஷ்யாவின் இந்த ஆய்வில் பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ரஷ்ய உளவாளிகள் இலக்கு வைப்பதாகப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி), ஹேக்கர்கள் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதியாகச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனினும், இதில் எந்தெந்த நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டன அல்லது ஏதேனும் தகவல் திருடப்பட்டதா என்று அது குறிப்பிடவில்லை.

உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில், 4 - வது இடத்தில் இருக்கும் ரஷ்யா, தன்னை முன்னிலை காட்டிக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை, மக்களைக் காப்பதில் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள் அறிவியலாளர்கள். மூன்றாம் நிலை ஆய்வில் வெற்றிப்பெற, வளர்ந்த நாடுகளே பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும்போது, ரஷ்யா இப்படிப் பொறுப்பின்றி செயல்படுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனப் பல தரப்பிலிருந்தும் ரஷ்யாவுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகிறது. 

இப்படி தடுப்பூசி கண்டறிவதில் பல நாடுகளுக்கிடையே நடந்துக் கொண்டிருந்த போட்டியில், தற்போது தடுப்பூசி விநியோகிக்கும் நாடு எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழும்பத் தொடங்கியுள்ளது. அந்தப் பட்டியலில், இந்தியாதான் முன்னணியிலும் இருக்கிறது. 

அதுபற்றி பேசிய பிரிட்டிஷின் (பிரிட்டனில் தயாராகிவரும் தடுப்பு மருந்துதான் இப்போதைக்கு முன்னணியில் இருக்கிறது) அரசு அதிகாரியொருவர், ``உலகிலேயே இந்தியாவில்தான் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியில் பணிகள் சிறப்பாக இருக்கிறது. ஆகவே இந்தக் கொரோனா தடுப்பு பணியிலும் எங்களோடு இணைந்து பணியாற்றுவதில், அவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்" எனக்கூறியிருக்கிறார்.

மேலும், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட்தான், இப்போதைக்கு தங்களோடு இணக்கமாக இருப்பதாகவும், அவர்களுக்கு இந்த தயாரிப்பு பணி தரப்படும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆகவே ஆய்வுநிலையிலிருந்து பிரிட்டனின் இந்த தடுப்பு மருந்துதான் உலகிலேயே முதலில் கண்டறியப்படும் தடுப்பு மருந்தாக இருந்தால், அதை உற்பத்தி செய்ய இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட், அஸ்ட்ரா செனிக்கா என்ற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏறத்தாழ 400 மில்லியன் Pounds வரை மருந்து தயாரிப்புக்கு பிரிட்டன் சார்பில் தரப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


- ஜெ.நிவேதா.