தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஃபேவரட்டான சேனல்களில் ஒன்றான விஜய் டிவியின் சீரியல்களின் மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது காற்றுக்கென்ன வேலி சீரியல். முன்னதாக பிரான்சிஸ் கதிரவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியலை தற்போது ஹரிஷ் ஆதித்யா இயக்கி வருகிறார். பிரியங்கா குமார் மற்றும் தர்ஷன்.கே.ராஜு ஆகியோர் கதாநாயகி - கதாநாயகனாக முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் மாளவிகா அவினாஷ், பானு பிரகாஷ், அக்ஷிதா, ஸ்ரீதேவி அசோக், ராகவேந்திரன் புலி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த சீரியலில் நடிகை பிரியங்கா குமார் - வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறு கிராமத்தில் பிறந்த இந்த வெண்ணிலா கதாபாத்திரம் கலெக்டர் ஆக வேண்டும் என்ற முனைப்போடு, பல தடைகளையும் மீறி, தனது கனவுகளை அடைய மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தனது படிப்பை தொடர்ந்து வருபவர். அதேபோல் தர்ஷன் கே ராஜு, சூர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சூர்யா - வெண்ணிலா கதாபாத்திரங்களுக்கு இடையிலான காதல் கதை இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்து வருகிறது.

இதனிடையே இந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் துணை நடிகராக நடித்து வரும் ஹரிஹரன் என்கிற கானா ஹரி தற்போது திடீரென காலமானார். காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவின் நண்பர்களில் ஒருவராக நடித்து வரும் ஹரி தனக்கே உரித்தான பாணியில் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்தவர். துணை நடிகராக மட்டுமல்லாமல் கானா பாடகராக பல கானா பாடல்களை எழுதி பாடியிருக்கிறார். நடிப்பு - கானா என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழ்ந்த ஹரி திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தனக்கு திறமைகள் இருந்த போதும் தான் எதிர்பார்த்த வாய்ப்புகள் எதுவும் தனக்கு கிடைக்காத வருத்தத்தில் ஹரி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தனக்குள் ஏகப்பட்ட திறமைகளோடு தனது முகம் வெளியில் தெரிய ஆரம்பித்த இந்த கொஞ்ச காலத்திலேயே ஹரி தனது உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இந்த கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் முத்திரை பதித்த ஹரியின் கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிப்பதற்கு வேறு யாரும் இல்லை என குறிப்பிட்டு ரசிகர்களும் சக நடிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். கானா ஹரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் விரைவில் இவரது தற்கொலைக்கான காரணம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனக்கான சிறிய கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து சின்னத்திரையின் வாயிலாக பல குடும்பங்களில் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த கானா ஹரியின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. கானா ஹரியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்களும் சின்னத்திரை உலகத்தினரும் தங்களது ஆறுதல்களையும் எங்களையும் தெரிவித்து வருகின்றனர்.