கடந்த 1999 ல் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பாலா. பின்னாளில் தனித்துவமான கதைகளை அட்டகாசமான திரைக்கதையில் கொடுத்து மிகப்பெரிய ஹிட் படங்களை வரிசையாக கொடுத்தவர் இயக்குனர் பாலா. அதன்படி, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளில் இவரது படங்கள் நினைத்த அளவு கை கொடுக்கவில்லை. பின் மீண்டும் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் புதிய படமான ‘வணங்கான்’ படத்தை இயக்குவதாக அறிவிப்பினை வெளியிட்டார். பின் சில காரணங்களினால் இந்த வெற்றி கூட்டணி இணையாமல் போக பின் நடிகர் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரமாக வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்க ஆயத்தமானார்.

இந்நிலையில் விறுவிறுப்பாய் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் பரபரப்பை ஏற்படுத்த கூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வணங்கான் படத்தில் திரைப்பட ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஜிதின். இவர் கேரளாவில் சம்பளம் அடிப்படையில் ஒன்பது துணை நடிகைகளை நடிக்க அழைத்து வந்துள்ளார். மூன்று நாட்களில் அவர்களின் காட்சி முடிந்த நிலையில் துணை நடிகர் நடிகையர்களுக்கு சம்பளமாக 22 ஆயிரத்து 600 ரூபாய் கொடுக்கப்படவில்லை என தெரிய வந்து துணை நடிகையில் ஒருவர் லிண்டா ஒருங்கிணைப்பாளர் ஜிதின் அவர்களின் கேட்டுள்ளார். இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜிதின் லிண்டாவினை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த லிண்டா அரசு மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் லிண்டா. இந்த சம்பவம் தற்போது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பாலா நடிகர்களை கடுமையாக தாக்கி திரைப்படங்களில் நடிக்க வைப்பதாக காலம் காலமாக ஒரு கண்ணோட்டம் திரைத்துறையில் இருந்து வருகிறது. அதன்படியே அவரது படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளும் இருந்து வருகிறது. இதற்கான பிரச்சனைகளையும் இயக்குனர் பாலா சந்தித்து வந்துள்ளார். ஏற்கனவே வணங்கான் திரைப்படம் படமாக்க பல பிரச்சனைகளை எதிர்கொண்டு நீண்ட நாள் கழித்து களமிறங்கிய பாலாவிற்கு இந்த சம்பவம் எந்த மாதிரியான பின் விளைவை தரும் என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.