கடந்த ஜூன் 29 ம் தேதி ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. பரியேரும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் மூன்றாவது திரைப்படம் போன்ற பல எதிர்பார்ப்புகளுடன் உருவான இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்திற்கு கூடுதல் பலமாக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவு வைரலானது . ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான இப்படத்திற்கு உலகளவில் நேர்மறையான விமர்சனங்கள் எழ மாமன்னன் திரைப்படம் உலகளவில் வெற்றி வாகை சூடி இன்றும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.மேலும் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து கவனம் பெற்றுள்ளது.

மேலும் சமீபத்தில் ஜூலை 27 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் பிரபல ஒடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. திரையரங்குகளில் கொடுத்த வரவேற்பை போல் மாமன்னன் திரைப்படம் ஒடிடியிலும் ஹிட் அடித்தது. மேலும் இந்தியாவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து கவனம் பெற்று வருகிறது. மேலும் உலகவில் டாப் 10 இடங்களில் 9 வது இடத்தில் மாமன்னன் திரைப்படம் இடம் வகித்துள்ளது.

பல்வேறு இடங்களில் மாமன்னன் திரைப்படம் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் படப்பிடிப்பின் போது வைகைபுயல் வ வடிவேலு பாடும் போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

‘காக்கும் கரங்கள்’ படத்தில் கேவி மகாதேவன் இசையில் வெளியான “ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக... செவ்வாய் கோவைப்பழமாக” என்ற பழைய பாடலை வடிவேலு பாடிக்கொண்டிருப்பதை மெய்மறந்து கேட்டப்படி மாரி செல்வராஜ் வீடியோ எடுத்து வருகிறார். இந்த வீடியோவுடன் மாரி செல்வராஜ்,

“காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக் கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான்.. நன்றி வடிவேலு சார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மாரி செல்வராஜ் பகிர்ந்த வீடியோ ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் படப்பிடிப்பு தளத்தின் போது வடிவேலு நன்றாக பாடுவார். அதன்படியே படத்தில் மாமன்னன் கதாபாத்திரம் அவ்வபோது பாடுபவராக வடிவமைத்தேன். என்று கூறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.