எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் பிரம்மாண்டமான தமிழ் திரைப்படங்களில் ஒன்று கங்குவா. முதல்முறையாக நடிகர் சூர்யா - இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் திரைப்படமான இந்த கங்குவா திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து அதிக எதிர்பார்ப்புகளும் வரத் தொடங்கின. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரதியாக பேட்டி கொடுத்த தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் கங்குவா திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் 'கங்குவா' நீங்களும் சூர்யா சாரும் இணைகிறீர்கள் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு தான்.. இப்போதெல்லாம் ஹீரோ - இயக்குனர் என்ற காம்போ போலவே ஹீரோ - தயாரிப்பு நிறுவனம் பெரும் ஆர்வத்தை உருவாக்குகிறது. அந்த வகையில் கங்குவா படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து நிறைய விஷயங்கள் எதிர்பார்ப்புகளைக் கூட்டி இருக்கின்றன. எனவே நீங்கள் சொல்லுங்கள் சூர்யா சார் உடன் மீண்டும் இணைந்து இருக்கிறீர்கள்… நடிகர் சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுப்பதில் ஒரு தனித்துவமான உணர்வு இருக்கிறது ரசிகர்கள் மிகவும் ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவரும் தொடர்ந்து ஏதாவது வித்தியாசமாக கொடுத்துக் கொண்டே இருக்கிறார் கங்குவா படத்தில் எப்படி இருக்கிறார்?" எனக் கேட்டபோது,

“ரொம்பவும் உற்சாகமாக இருக்கிறார் இவ்வளவு சந்தோஷமாக மிகவும் திருப்தியாக ஒரு படம் பண்ணி நான் பார்த்தது கிடையாது. ஏதோ ஒரு சின்ன பயம் தயக்கத்தோடு இருந்து கொண்டிருப்பார். இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சாகத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த மாதிரி ஒரு படம் எங்களுக்கு அமைத்ததில் எங்களுக்கு மிகவும் சந்தோஷம்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

பிரபல இளம் பாலிவுட் நடிகை திஷா பதானி கதையின் நாயகியாக நடிக்கும் இந்த கங்குவா திரைப்படத்தில் நட்டி என்கிற நடராஜன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் கங்குவா திரைப் படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவரும் என தெரிகிறது. முன்னதாக கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா காயமடைந்ததால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. தற்போது நடிகர் சூர்யா காயத்தில் இருந்து மீண்டு வருவதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.