தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக மக்களின் தன் நகைச்சுவையால் கவர்ந்து இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விவேக். அவர் மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது. இன்றும் ரசிகர்களை தன் நகைச்சுவை படங்கள் மூலம் அனைத்து கொண்டு ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கிறார். அதன்மூலம் அவர் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 1961 ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அங்கையா பாண்டியன், மணியம்மை தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் விவேகானந்தர் என்கிற விவேக்.

வர்த்தக இளங்கலை துறையில் பி காம் பட்டம் பெற்ற இவர் அதே துறை கல்வியில் முதுகலை பட்டம் முடித்து பின் சிறிது காலம் மதுரையில் தொலைபேசி ஆபரேட்டராக வேலை பார்த்துள்ளர். பின்சென்னை திரும்பி அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராக பணியாற்றி வந்தார். சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் மிகுந்து இருந்த இவர் பல நாடங்களிலும் அதே நேரத்தில் நடித்து வந்தார். பின் விவேகானந்தர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. பின் அவர் இயக்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். சிறு வேடத்தில் அந்த படத்தில் நடித்து கவனம் பெற்ற விவேக். பின் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘புது புது அர்த்தங்கள்’ படத்தில் நடித்து மிகப்பெரிய கவனம் பெற்றார். உடல் மொழியில் ரசிகர்களை ஆரம்ப காலத்திலே சிரிக்க வைத்தும் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டையும் வரவேற்பையும் அந்த படத்திலிருந்தே பெற தொடங்கினார் நடிகர் விவேக்.

அதன்படி தொடர்ந்து இதய வாசல், புத்தம் புது பயணம், புதிய மன்னர்கள், தாயகம், ஒரு வீடு இரு வாசல், கேளடி கண்மணி போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வர தொடங்கினார். பின் 90 களில் ‘மின்னலே’, ‘ரன்’, ‘தூள்’, சாமி’, ‘தமிழன்’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’ போன்ற பல படங்களில் நடிகர் விவேக் தொடர்ந்து அட்டகாசமான நகைச்சுவையுடன் சமூக சீர்த்திருத்த கருத்துகளையும் சேர்த்து புது வகையான நகைச்சுவை பாணியை கையிலெடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்தார். ஒரே நேரத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இவரது நகைச்சுவை காமெடிகள் பன்ச் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதனாலே மக்கள் மத்தியில் சின்ன கலைவாணர் என்ற பெயரும் பெற்றார். ஊழல், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் நய்யாண்டி, வேலையில்லா திண்டாட்டம், மூட நம்பிக்கை கருப்பொருளாக கையில் எடுத்து பல காமெடி காட்சிகளில் நடித்து வந்தார். திரைப்படங்களில் விவேக் காமெடி தனி டிராக்கில் சென்று மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதன்படி திரைத்துறையில் பத்ம ஸ்ரீ விருதுடன் பல உயரிய விருதுகளை நடிகர் விவேக் அவருக்கு கிடைத்துள்ளது. இவர் விஞ்ஞானியும் முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாம் ஐயா அவர்களின் தீவிர பற்றாரளர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் சமூக செயல்பாட்டில் தீவிரமாக இறங்கினார். அதில் குறிப்பாக மரம் நடுதல் பணியை தன் முதல் கடமையாக எண்ணி அதில் தொடர்ந்து இயங்கி வந்தார். அதன்படி ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவர் வாழும் காலத்தில் பல லட்ச மரக்கன்றுகளை நட்டு வந்துள்ளார் நடிகர் விவேக். மக்களின் நலனுக்காக திரையிலும் சமூதாயத்தில் இயங்கி வந்ததால் மக்களினால் ‘மக்கள் கலைஞர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

திரையிலும் சமூதாயத்திலும் தன்னிகற்ற மாமனிதனாக வாழ்ந்த விவேக் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மக்களுக்காக இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து காலங்கள் பல ஆண்டு ஓடினாலும் அவரது நகைச்சுவையினாலும் அவர் நட்ட மரங்களினாலும் நம்மிடம் உயிர்ப்புடன் வாழ்வார். அவருடைய மனிததன்மை தமிழ் நெஞ்சங்கள் அனைவரிடமும் கோலோச்சி நிற்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

அரசு ஊழியராக தன் வாழ்கையை தொடங்கி பின் சினிமாவையும் இயற்கை வளங்களையும் தன் இரு கண்களாக எண்ணிய மாமனிதர் விவேக் அவரது மறைவு நாளில் அவர்களை நினைவுகூருகிறது நமது கலாட்டா தமிழ் மீடியா.