நீண்ட காத்திருப்புக்கு பிறகு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் & சீயான் விக்ரம் கூட்டணியின் துருவ நட்சத்திரம் திரைப்படம் நாளை மறுநாள் நவம்பர் 24ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் நடிகர் சூர்யாவை வைத்து தொடங்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த கதையை சில மாற்றங்கள் செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியிருக்கிறார். அதன் பிறகு தான் நடிகர் சீயான் விக்ரமுடன் இணைந்து இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் உருவாக்கி இருக்கிறார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியபோது மூவருக்கும் கதை சொன்னதில் இருந்த மாற்றங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்படி பேசும் போது,

“இதுவரைக்கும் எல்லோருக்கும் தொடர்புடையதாக இருக்குமா என்று பார்த்தால் இருக்கும் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆரம்பத்தில் என்ன எண்ணம் இருந்ததோ அதே எண்ணம் தான்.. ஸ்கிரிப்டில் எதுவுமே மாற்றமில்லை இப்போது பேசிய போது கூட சொன்னேன் இதில் ஒரு எமோஷனலான பிளாஷ்பேக் இருந்தது. முதலில் சூர்யாவிடம் கதை சொல்லும் போது அதை சொல்லி இருந்தேன். ஒரு இளம் பருவத்தின் பகுதி இருந்தது. 18 - 20 வயது இருக்கும் ஒரு பகுதி இருந்தது. இந்த கதாநாயகனுடைய இளமை, கடந்த காலம் அவர் எங்கிருந்து வந்தார் ? அவருக்கு என்ன நடந்தது என்பது இல்லை என்றால் அவர் ஒரு வேலை இந்த அணிக்குள் வந்திருக்க மாட்டார். அந்த சீனியர் நபர் இந்த மொத்த அணியை கட்டமைத்த அந்த நபர் அவர் கேட்பார் “எனக்கு என்னை மாதிரியே வருத்தத்தோடு சுற்றிக் கொண்டிருக்கும் சில பேர், அவர்கள்தான் இந்த அணிக்குள் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன் அவர்கள் தான் இந்த பயணத்தை எடுத்து செல்வார்கள்” என்று சொல்வார். அதற்காக ஒரு ஃபிளாஷ்பேக் இருந்தது. ஆனால் இந்த படத்திற்காக நான் அந்த ஃபிளாஷ்பேக்கை ஷூட் பண்ண வில்லை. இதில் LOOSE END-ஆக அதை விட்டு இருக்கிறேன். இந்த படம் நன்றாக போனால் அடுத்த படத்திற்கு அதை ஷூட் பண்ணுவேன் அந்த பிளாஷ்பேக்கை சொல்லுவேன். இந்த கதாபாத்திரத்தின் பின்னணி கதை. மற்றபடி எனக்கு என்ன வேண்டுமோ அதை ஷூட் பண்ணி இருக்கிறேன். உங்களுக்கெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இதை முதலில் சூர்யாவிடம் சொன்னேன் அது அப்போது நடைபெறவில்லை. அதன் பிறகு இதை ரஜினி சாரிடம் சொன்னேன். அப்படி என்றால் நீங்கள் யோசித்துப் பாருங்கள் சூர்யாவிலிருந்து ரஜினி சார்… அதற்கு தகுந்த மாதிரி மாற்றங்களோடு தான் அவரிடம் போய் நான் கதை சொன்னேன் அவரிடம் சொல்லும் போது இந்த எமோஷனலான ஃபிளாஷ்பேக் கிடையாது. இந்த காதல் போர்ஷன் கிடையாது. ரித்து வந்திருக்க மாட்டார்கள் இந்த படத்திற்கு… அதன் பிறகு விக்ரம் இடம் வரும்போது ஒரு 40 வயதில் இருக்கும் ஆண் அவரை விட வயதில் மிக குறைந்த ஒரு பெண்ணிடம் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். ஒரு காதல் ஒரு ரொமான்ஸ் ஒரு பிரண்ட்ஷிப் அது இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது அதனால் அவர் (ரித்து வர்மா) வந்திருக்கிறார்."

என தெரிவித்திருக்கிறார். அந்த முழு பேட்டி இதோ…