தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் படத்திற்கு படம் ஆச்சர்யத்தை கொடுக்க கூடிய இயக்குனராக இருப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். முதல் படமான பரியேரும் பெருமாள் படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ். இரண்டாவது படத்திலே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் அவர்களுடன் கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணியில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்று மாரி செல்வராஜ் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது.

பின் அடுத்த படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்க இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வைகை புயல் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படம் கிடடத்தட்ட முடிந்த நிலையில் விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னன் திரைப்படம் இறுதிகட்டத்தில் இருக்கும்போதே அடுத்த படமான ‘வாழை’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் வாழை திரைப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. மாரி செல்வராஜ் சியான் விக்ரம் அவர்களின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் அவர்களை வைத்து படம் இயக்கவுள்ளதாக முன்னதாக அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் அப்படம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இயங்கி வரும் மாரி செல்வராஜ் அதிரடியாய் மீண்டும் தனுஷ் அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதன்படி தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான WUNDERBAR FILMS பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் 15வது திரைப்படமாக தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்நிலையில் அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் மன்றம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்புப் விழா தென் சென்னை பகுதியில் நடைபெற்றது. இந்த செயல்பாட்டினை துவங்கி வைத்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தனுஷ் அவர்களுடன் கூட்டணி குறித்து பேசினார். அதில்,

“அந்த படம் திட்டமிட்டது தான் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் துவங்க முடியல. தனுஷ் சார் அந்த படத்தை நானே தயாரிக்குறேனு முன் வந்திருக்கார். நானே எதிர்பார்க்காத அறிவிப்பு அதுதான்.. தற்போது துருவ் படம் துவங்கவிருக்கிறேன். அது முடிந்ததும் தனுஷ் சார் படம் பண்ண போறேன்." என்றார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

மேலும் தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ் “எனது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் .ஒரு பாய்ச்சலா இருக்கும்.. இவ்ளோ நாள் நான் அதை தொடங்காததற்கு காரணமும் அதனால் தான்‌. அதனை உடனே இயக்க முடியாது. அது ஒரு வரலாற்று படம். ஒரு முக்கியமான படம். அந்த படம் எடுக்க ஒரு முதிர்ச்சி தேவைப்படும். நான் சினிமாவை அதற்கு கற்று கொள்ள வேண்டும். கர்ணன் பிறகு படம் பன்றோம்னா அந்த எதிர் பார்பை பூர்த்தி செய்யும் அளவு நான் எந்த இடத்திற்கு போகனும்.‌ அதற்காக தனி நேரம் தேவைப்பட்டது. தனுஷ் சார் அந்த படத்தை நம்புகிறார். அதை பூர்த்தி செய்கிற படமாக இருக்கும். " என்றார்.

மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் மாமன்னன் படம் குறித்து பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோவை காண...