தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையுடன் உணர்வுகளின் அழகியலை படத்திற்கு படம் சொல்லும் இயக்குனர்களில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர் ஹலிதா ஷமீம். 2014 பூவரசம் பீப்பீ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலே நேர்த்தியான காட்சியமைப்பின் மூலம் கவனம் பெற்றார். பின் நீண்ட இடைவெளிக்கு பின் ஹலிதா ஷமீம் அட்டகாசமான ஆந்தாலஜி படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுதார் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக வலம் வந்தார் ஹலிதா ஷமீம். அதன் பின் சமுத்திரகனி, மணிகண்டன் நடிப்பில் அப்பா மகன் கதையை அடிப்படியாக கொண்டு இயக்கிய திரைப்படம் ‘ஏலே’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இடையில் ‘புத்தம் புது காலை விடியாதோ’ என்ற ஆந்தாலஜியில் ஒரு தொகுப்பு இயக்கியிருந்தார். மேலும் மின் மினி என்ற படத்தை 6 வருடங்களாக திட்டமிட்டு படமாக்கி கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஹலிதா ஷமீம் தனது சமூக தளத்தில் பதிவிட்ட பதிவின் மூலம் திரைத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மலையாளத்தில் 'ஜல்லிக்கட்டு', 'சுருளி' போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி. இவர் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில் கேரளா தமிழ்நாட்டு இடைப்பட்ட பகுதிகளில் நடைபெறும் கதையாக உருவாக பட்ட இப்படத்தில் பெரும்பாலும் தமிழ் சார்ந்த கதையும் தமிழ் மக்களும் இடம் பெற்றிருக்கும். தமிழ் நடிகர்களான ரம்யா பாண்டியன், மறைந்த பூ ராமு போன்ற பல தமிழ் முகங்கள் இப்படத்தில் நடித்திருப்பார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 23 ம் தேதி பிரபல ஒடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் ல் வெளியானது. திரையரங்கை விட இதில் நிறைய பேர் படம் பார்த்து படத்தை பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் ஹலிதா ஷமீம் இப்படத்தை பார்த்து வேதனையடைந்து தனது ஏலே படத்தின் அழகியல் திருடப்பட்டு விட்டது என்ற நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் மீது குற்றசாட்டினை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார் அதில்,

'ஏலே' படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது. ஐஸ்காரர் இங்கே பால்க்காரர். செம்புலி இங்கே செவலை. Mortuary van பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது.

நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலே- வில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார். படமாக்கப்பட்ட வீடுகள்,பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள்- இவை யாவும் படத்தில் பார்த்தேன். நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன! எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து உடனடியாக சமூக தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பதிவு மிகப்பெரிய அளவு பேசு பொருளாக மாறியது.

தற்போது தமிழ் ரசிகர்கள் நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் ஹலிதா ஷமீமின் ஏலே திரைப்படத்தையும் ஒப்பிட்டு தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.