ஆகச்சிறந்த நடிகராக படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என அசத்தி வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த மாறன், தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம் நானே வருவேன்  என வரிசையாக 4 திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அந்த வகையில் அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.சமீபத்தில் தொடங்கிய கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகியுள்ள திரைப்படம் வாத்தி. 

முதல்முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் தனுஷ் நடித்துள்ள வாத்தி (SIR) திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

J.யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள வாத்தி திரைப்படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தமிழில் தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.