யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று மே 3ம் தேதி நடிகர் மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்பால் மிகுந்த அவதிப்பட்டு வந்த நடிகர் மனோபாலா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கடந்த 15 நாட்களாக தனது வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்த நடிகர் மனோபாலா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வளம் வந்த மனோபாலாவின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் மனோபாலா இயக்குனராகவும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஊர்க்காவலன், நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்த பிள்ளை நிலா, கார்த்தி கதாநாயகனாக நடித்த தூரத்து பச்சை, சத்யராஜ் கதாநாயகனாக நடித்த மல்லுவேட்டி மைனர், சரத்குமார் கதாநாயகனாக நடித்த வெற்றிப்படிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை மனோபாலா இயக்கியுள்ளார். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவருமான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள் சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ஆகிய திரைப்படங்களில் மனோ பாலா இயக்கத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மனோபாலா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் அவர்கள் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

எனது அன்பு நண்பர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நான் நடித்துள்ளேன். அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

என தெரிவித்துள்ளார். விஜயகாந்த் அவர்களின் அந்த முழு அறிக்கை இதோ…