பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களின் வாழ்க்கையில் நடந்த பூகம்பம் மாதிரியான ஒரு மோசமான சம்பவம் குறித்து கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது பேசிய விசித்ரா தனது வாழ்க்கையில் நடந்த பூகம்பம் மாதிரியான ஒரு மோசமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அது என்னவென்றால்,

"கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் பிரபலமான முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவர், அவருடைய படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள மலப்புழாவில் நடைபெற்றது. எனவே அங்கே இருந்த ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன். அந்த ஹோட்டலில் தான் என்னுடைய வருங்கால கணவரையும் முதல் முறை நான் சந்தித்தேன் அவர் அந்த ஓட்டலில் ஜெனரல் மேனேஜராக பணியாற்றி வந்தார். படப்பிடிப்பின் போது அந்த படத்தின் கதாநாயகரிடம் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்பதை சொல்லி என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காக போயிருந்தேன். அப்போது அவர் என்னுடைய பெயரை கூட கேட்காமல், “நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? அப்படி என்றால் இரவு என்னுடைய அறைக்கு வந்து விடு” என சொல்லி சென்று விட்டார். அவர் அப்படி சொன்னதுமே எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் நான் என்னுடைய அறைக்கு வழக்கம் போல் சென்று தூங்கி விட்டேன் இருப்பினும் அன்று இரவு முழுக்க பல பேர் என்னுடைய அறையை பலமுறை தட்டிக் கொண்டே இருந்தனர். நான் மிகவும் பயந்து விட்டேன் எப்படியாவது படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரை இதே மாதிரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையை சகித்துக் கொண்டிருந்தேன். ஒரு நடிகரின் பெயரை சொல்லி தினமும் சில நபர்கள் குடித்துவிட்டு என்னுடைய அறையின் கதவை தட்டி பிரச்சனை செய்தனர்.

இதனை கவனித்த என்னுடைய கணவர் என்னிடம் இந்த பிரச்சனைக்கு நான் ஏதாவது உதவி செய்யட்டுமா என்று கேட்டார். அப்போது நான் இந்த ஓட்டலில் தங்குவதற்கு எனக்கு ஒரு அறை வேண்டும். நான் இங்கே தங்கி இருக்கிறேன் என்ற விஷயம் யாருக்குமே தெரியக்கூடாது என்று… அவரும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் என்னை ஒவ்வொரு அறையில் தங்க வைத்தார். அது யாருக்குமே தெரியாது. இது அந்த நடிகருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. நான் அவர்களது எண்ணத்திற்கு ஒத்துப் போகவில்லை என்பதால் என்னை எப்படியாவது படத்திலிருந்து தூக்கி விட வேண்டும் என்று திட்டமிட்டனர். ஒரு நாள் சண்டைக் காட்சி ஒன்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ஸ்டண்ட் காட்சியில் மக்கள் எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தனர் அப்போது ஒரு நபர் பின்னால் இருந்து என்னை தவறான நோக்கத்தில் என் உடல் பாகங்கள் மீது கை வைத்தார். முதலில் தெரியாமல் நடந்து விட்டது என்று நினைத்து நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு டேக்கிலும் இதே மாதிரி தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. பின்னர் அடுத்த முறை நடக்கும்போது அந்த நபரை கையோடு பிடித்து ஸ்டண்ட் இயக்குனரிடம் ஒப்படைத்தேன். ஆனால் அவர் அந்த நபரை எதுவும் செய்யாமல் என் கன்னத்தில் பளாரென அறைந்தார். அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று யாருமே அந்த அநீதியை தட்டி கேட்கவில்லை எனக்காக குரல் கொடுக்கவும் இல்லை. நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். என்னுடைய நண்பர் புகார் கொடுக்க சொன்னார் நானும் புகார் கொடுத்தேன். அந்த செய்தி, செய்தி சேனல்களில் வெளியாகியிருந்தது. ஆனால் எனக்கு திரைத்துறையில் இருந்து யாருமே உதவி செய்யவில்லை. நடிகர் சங்கத்திடம் நான் பேசிய போது அவர்கள் இதை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு நடிப்பதை பாருங்கள் என்று அந்த சமயத்தில் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் தெரிவித்தார். இதனால் தான் நான் வெறுத்து போய் கடந்த 20 வருடமாக நடிப்பதையே விட்டு விலகி இருந்தேன்"

என்று தெரிவித்தார். மிகவும் எமோஷனாக பேசிய விசித்ராவின் இந்த கதையைக் கேட்ட ஹவுஸ்மெட்ஸ்கள் அனைவரும் மனமுடைந்து கண் கலங்கினர்.