தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரக் கூடிய முதல் திரைப்படம் ‘வாத்தி’. கல்வியையும் கல்வியில் நடக்கும் ஊழலையும் எடுத்து சொல்லும் படமாக உருவாகியுள்ளது வாத்தி திரைப்படம். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். பைலிங்குவலாக தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகவிருக்கின்றது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன்,சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் உருவான வாத்தி திரைப்பட பாடல்கள் நேற்று சென்னையில் மிகப்பெரிய அளவு இசை வெளியீட்டு விழா நடத்தி வெளியிட்டனர். இவ்விழாவில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் பாரதி ராஜா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வாத்தி பட பாடல் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் அரங்கம் அதிரும் ஆரவாரத்துடன் தனுஷ் மேடையேறினார். அப்போது பேசிய அவர்,

"எதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் பெற்றோர்களின் வேண்டுதல்கள் உங்களுடைய கைத்தட்டலாக என்னை வந்து சேர்கிறது. வாத்தி திரைப்படம் 90 -களில் நடக்கக்கூடிய ஒரு கதை. இந்தப் படத்துல நடிக்குறப்போதான் ஆசிரியர்களின் வேலை எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சது. ஆசிரியர்கள் தான் நம் தலையெழுத்தை மாற்றக் கூடியவர்கள். லாக்டவுன்ல தான் வெங்கி இந்த கதையைச் சொன்னார். நானே அப்போ வேலை இல்லாம மன உளைச்சல்ல இருந்தேன். வர்ற கதையை எப்படியாவது மறுத்துடலாம்னு இருந்தேன். கதையைக் கேட்டதும் எனக்கு பிடிச்சிருச்சு. அவரிடம் எப்போது தேதி வேண்டும் என்று தான் கேட்டேன். இந்தப்படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.” என்றார்.

மேலும் “சமுத்திரக்கனி அண்ணா இல்லாத தமிழ் படத்தையும் பாக்க முடில. தெலுங்கு படத்தையும் பாக்க முடில. வி.ஐ.பி படத்தப்போ லைட்டா தினறுவாரு. இப்போ வாத்தி படத்துல 4 பக்க டயலாக்கையும் சரசரன்னு பேசிடறாரு. ஜி.வி. போல்டன் ஃபார்ம்ல இருக்காரு. படிப்பு பிரசாதம் மாதிரி. அதை பைவ் ஸ்டார் ஹோட்டல்ல விக்காதீங்க' - இதுதான் வாத்தி படத்தின் கதை. பள்ளியில் பெற்றோர்கள் பீஸ் கட்டிருவாங்கன்னு என்று கவனமின்றி சுத்திருக்கேன். என் பிள்ளைகளை படிக்க வைக்குறப்போ தான் அது தெரியுது. எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பு மிகவும் அவசியம். எண்ணம் போல் வாழ்க்கை, உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள் அது தான் உங்களைக் காப்பாற்றும்." என்று பேசினார்.

மேலும் அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ், “நான் என் விஷயங்களைச் சரி செய்து கொள்ள வேண்டும் என்று ஹோம் வொர்க் செய்வேன். 2010 வரை என்ன இப்படி செய்திருக்கிறோம் எனத் தோன்றும் இனி வரும் வருடங்கள் அப்படி இருக்கக் கூடாது என எண்ணுவேன்" என்றார். பிறகு, "என் வண்டிக்கு பின்னால் என்னைப் பின் தொடர்ந்து வருகிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களை நம்பி அனுப்பிவைக்கிறார்கள். அப்படி நீங்கள் செய்யும்போது எனக்கு பயமாக இருக்கிறது" என்று ரசிகர்களுக்கு அறிவுரை சொன்னார்.

மேலும் விழாவில் ரசிகர்களோடு இணைந்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘தேன்மொழி’ பாடலை பாடினார். மேலும் படத்தின் ஆல்பத்தில் இடம் பெற்றிறாத வா வாத்தி பாடலின் மற்றொரு VERSION தனுஷ் பாடகி ஸ்வேதா மோகன் உடன் இணைந்து பாடினார். இவர்களுடன் மேடையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்தார்,

வாத்தி படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது மேலும் வாத்தி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.