டிக்டாக்கில் ஜோடி ஆனதன் மூலம் மலர்ந்த காதல், கொலையில் முடிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியைச் சேர்ந் 19 வயது இளம் பெண் ஆஷிகா, கேரளா மாநிலம் கொள்ளத்தில் உள்ள கல்லூரியில் அழகுக் கலை பயின்று வந்தார்.

இந்நிலையில், அந்த மாணவி அடிக்கடி டிக்டாக்கில் பாடியும், நடனம் ஆடியும் வீடியோ வெளியிட்டு வந்தார். அப்போது, அந்த மாணவிக்கு, அனு என்ற இளைஞர், டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவதன் மூலம் பழக்கம் ஆனார்.

பின்னர், இருவரும் காதலிக்க ஆரம்பித்த நிலையில், இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றியதாகவும் தெரிகிறது.

ஒரு கட்டத்தில், அந்த இளம் பெண் வீட்டில் காதல் விவகாரம் தெரியவந்த நிலையில், இளம் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து, தன் காதலனைச் சந்திப்பதையும், அவனுடன் பேசுவதையும், அந்த பெண் தவிர்த்து வந்தார்.

இதனால், அந்த காதலன் பெண்ணின் வீட்டிற்கே வந்து கொலை மிரட்டல் விடுத்தான். இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்த நிலையில், கடும் கோபமடைந்த அவன், தன் காதலியைக் கொலை செய்யத் திட்டமிட்டான்.

அதன்படி, அந்த பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்கு வந்த அனு, ஆஷிகாவின் கழுத்தை அறுத்து, கொடூரமா கொலை செய்துள்ளான். பின்னர், தன்னை தானே கழுத்தை அறுத்துக்கொண்டு, அவனும் தற்கொலை செய்துகொண்டான்.

இதனிடையே. வீடு திரும்பிய ஆஷிகாவின் பெற்றோர், வீட்டில் இருவரும் இறந்து கிடந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப் பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.