தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 22 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக வன்முறை ஏற்பட்டதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, நேரில் வந்து பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த், “பேரணியில் சமூக விரோதிகளால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அளித்த பேட்டி குறித்து விசாரணை நடத்துவதற்காக, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியது.

அதன்படி, தூத்துக்குடி அலுவலகத்தில் வரும் 25 ஆம் தேதி, நடிகர் ரஜினி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து, தனக்கு விலக்கு வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “நான் நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால், எனக்கான கேள்விக்கு நான் எழுத்து மூலம் பதில் அளிக்கத் தயார். இதன் காரணமாக, எனக்கு நேரில் ஆஜராவதிலிருந்து, விலக்கு வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.