சேலத்தில் கள்ளக் காதலன் மீது இருந்த தீரா வெறியால், மனைவியே தன் கணவனை தீ வைத்து கொடூரமாக எரித்துக்கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்து உள்ள வீரகனூர் வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான சின்னசாமி, அந்த பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இதனால், கட்டிட பணிகளுக்காக அவர் அடிக்கடி திருச்சிக்கு சென்று வந்து உள்ளார்.

சின்னசாமிக்கு 46 வயதில் சகுந்தலா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு 26 வயதில் சின்னதுரை என்ற மகனும், 23 வயதில் மஞ்சு என்ற மகளும் உள்ளனர்.

இந்த சூழலில் சின்னசாமி கட்டிட வேலை விசயமாக அடிக்கடி திருச்சிக்கு சென்று வந்த நிலையில், அவர் மனைவி சகுந்தலாவிற்கு, அங்குள்ள கெங்கவல்லி அடுத்து உள்ள ஆணைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி உடன் கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, சகுந்தலா - அந்தோணி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். அப்படி, சகுந்தலா தனது கள்ளக் காதலை தேடிச் சென்ற நிலையில், திருச்சிக்கு வேலைக்கு சென்றிருந்த சின்னசாமி, திடீரென்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மனைவி சகுந்தலா வீட்டில் இல்லாததைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, சின்னசாமி தனது மனைவியிடம் இது குறித்து விசாரித்து உள்ளார். அப்போது, மனைவியின் கள்ளக் காதல் விசயம் அவருக்குத் தெரிய வந்தது.

இதனால், கணவன் - மனைவி இடையே சண்டை வந்துள்ளது. அப்போது, சின்னசாமி தன் மனைவியை கண்டித்து உள்ளார். ஆனால், மனைவி சகுந்தலாவோ கணவனின் கண்டிப்பு பற்றி துளியும் கவலைப்படாமல் தன் கள்ளக் காதலை தேடிச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தன் மனைவியை சின்னசாமி பல முறை கண்டித்து உள்ளார். இதன் காரணமாக, அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது.

இந்நிலையில், கள்ளக் காதல் மீது சகுந்தலாவிற்குத் தீராத ஆசை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில், “தன்னுடைய கள்ளக் காதலுக்கு கணவன் தடையாக இருப்பதால், அவரை கொலை செய்தால், நாம் கள்ளக் காதல் இன்பத்தில் முழுமையாக ஈடுபடலாம் என்று யோசித்து கணவனை கொலை செய்யவும் முடிவு” செய்தார்.

அதன்படி, கணவனுக்கு இருக்கும் குடி பழக்கத்தைப் பயன்படுத்தி, அவரை கொலை செய்து விடலாம் என்று மனைவி சகுந்தலா திட்டம் தீட்டி உள்ளார்.

அப்படியே, வேலையை முடித்துக்கொண்டு சின்னசாமி, மது போதையில் வீடு திரும்பி உள்ளார். வீட்டில் கணவன் நல்ல போதையில் இருந்ததை கவனித்த மனைவி, இது தான் சரியான தருணம் என்று முடிவு செய்து, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து உள்ளார்.

இதில், சின்னசாமி மீது தீ பற்றி எரிந்த நிலையில், அவர் அலறி துடித்து உள்ளார். இதனால், சின்னசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சின்னசாமியை மீட்டு, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் மனைவி சகுந்தலா, “எப்போதும் போல் எனக்கும் அவருக்கும் சண்டை வந்தது. இந்த சண்டையில் தான் அவர் தன் உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளார்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், சகுந்தலாவிடம் தங்களது பாணியில் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் தான், இந்த கள்ளக் காதல் கதை வெளிச்சத்திற்கு வந்தது.

இதனிடையே, கள்ளக் காதலன் மீது இருந்த தீராத காம வெறியால் மனைவியே, கணவனை தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம், அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.