ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகளாகக் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டமாக அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, “கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த 11 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உலக பொருளாதாரம் மிகப் பெரிய சரிவு கண்டுள்ளதாக” குறிப்பிட்டார்.

இதனால், “உலக பொருளாதாரம் 13 சதவிகிதம் முதல் 32 சதவிகிதம் வரையிலான அளவிற்குச் சுருங்கக்கூடும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

“தற்போது, நகர்புற கிராமப்புற தேவைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக” கவலைத் தெரிவித்த சக்திகாந்த தாஸ், வேளாண் துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாக” குறிப்பிட்டார்.

குறிப்பாக, “கொரோனா தாக்கத்தால் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் கடும் தாக்கத்தைச் சந்தித்துள்ளதாகவும், மத்திய அரசின் வரிவசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, “ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைக்கப்படுகிறது என்றும், இதன்படி, 4.4 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக ரெப்போ வட்டி விகிதம் குறைகிறது” என்றும், அவர் கூறினார்.

மேலும், “ரிசர்வ் வங்கியின் பணிகள் தொய்வடையாமல் இருக்க 200 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர் என்றும், குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்” என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கைத் தெரிவித்தார்.