முகநூல் வழியாகக் காதலில் விழ வைத்து, 12 ஆம் வகுப்பு மாணவியைப் பலாத்காரம் செய்த அரசியல்வாதி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 102 வது வட்ட செயலாளர் சென்னை டிபி சத்திரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சத்யா, ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கிறார்.

ஆட்டோ சவாரி இல்லாத நேரங்களில், முகநூல் மூலம், இளம் பெண்களுக்குத் தூண்டில் போட்டுள்ளார். அதில், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை, தன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

பின்னர், அந்த மாணவியிடம் போன் நம்பர் வாங்கி, அவரிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி சம்பவத்தன்று பள்ளி முடிந்த வந்த மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, தனது ஆட்டோவிலேயே மாணவியைத் தனியாக அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து, மாணவியின் செயல்பாடுகளில் மாற்றம் வரவே, அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது, ஆட்டோ சத்தியா மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாமக சதுரச் செயலாளர் சத்யாவை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், பாமக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.