இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய இளைஞரை, போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த தட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி, தன்னை ரிப்போட்டர் என்று சொல்லிக்கொண்டு ஊரில் சுற்றி திரிந்துள்ளார்.

மேலும், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய ஊழியர் பூங்கொடியிடம், போன் மூலம் மிரட்டி, “ நீ குளிக்கும் வீடியோ காட்சிகள் என்னிடம் இருக்கிறது. அதை வெளியே பரப்பக்கூடாது என்றால், எனக்கு பணம் வேண்டும்” என்று மிட்டி உள்ளார்.

இதனால் பயந்துபோன பூங்கொடி, அவரிடம் ஆரம்பத்தில் பணம் கொடுத்துள்ளார். ஆனால், வெள்ளியங்கிரி அடிக்கடி பணம் கேட்டு பூங்கொடியை டார்ச்சர் செய்துள்ளார்.

இதனால், பயந்துபோன பூங்கொடி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வெள்ளியங்கிரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், அவனிடமிருந்த செல்போனையும் பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை குளிக்கும்போது, அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும், அடிக்கடி பணம் கேட்டு மிரட்டவே, அந்த பெண் தற்கொலை செய்துகொள்வதாக அழுது கதறுவதுமான ஆடியோவும், அவனது செல்போனில் இருந்துள்ளது.

மேலும், ஏற்கனவே ஒரு பெண் இது போல் மிரட்டும்போது, தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டது தொடர்பான ஆடியோவும் இருந்துள்ளது.

அதேபோல், அந்த பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர், பார் உரிமையாளர்கள், மணல் கடத்தல் கும்பல் என பலரையும் மிரட்டி பணம் கேட்டு மிரட்டும் ஆடியோக்களும் அவனது செல்போனில் இருந்துள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், வெள்ளியங்கிரி மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.