வருமான வரித்துறை விசாரணையில் நடிகர் விஜய் உட்பட யாரும் ஆஜராகாததால், காத்திருந்த அதிகாரிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

நடிகர் விஜய், பிகில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 38 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த வாரம் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

Actor Vijay not attending hearing

இந்த சோதனையில், 77 கோடி ரூபாய் பணமும், பல்வேறு சொத்து தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, நடிகர் விஜய், தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.

அந்த சம்மனில், அடுத்து வரும் முதல் 3 நாட்களில் நேரில் ஆஜராக அவர்கள் 3 பேருக்கும் உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று அவர்கள் 3 பேரும் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

Actor Vijay not attending hearing

இதற்காக, வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நாள் முழுவதும் காத்திருந்தனர். ஆனால், நடிகர் விஜய் உட்பட யாரும் நேற்று ஆஜராகாததால், காலை முதல் காத்திருந்த அதிகாரிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

அத்துடன், நடிகர் விஜய் உட்பட 3 பேர் தரப்பிலும் வேறு வேறு காரணங்கள் கூறப்பட்டதாகவும், மற்றொரு நாளில் அவர்கள் ஆஜராவதாக வருமான வரித்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, நடிகர் விஜய் உட்பட 3 பேர் தரப்பிலும் இன்று நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.