குடும்ப பிரச்சனையில் கணவனே, மனைவியை உயிருடன் புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட் பாலம் கிராமத்தைச் சேர்ந்த சுவாமுலு - சுபாஷினி தம்பதியினர் 7 வயது மகளுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி மருந்து அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்ற சுவாமுலு, மனைவியுடன் பிரச்சனை செய்து, அவரை கடுமையாகத் தாக்கி உள்ளார்.

இதில், எதிர்பாராத விதமாக சுபாஷினி, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால், மனைவி இறந்துவிட்டதாக நினைத்த அவரது கணவர், மனைவி இறந்ததை வெளியே தெரியாமல் மறைக்கும் விதமாக, வீட்டிற்கு அருகிலேயே குழி தோண்டி புதைத்துள்ளார்.

பின்னர், இது குறித்து வெளியே யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று தனது 7 வயது மகளை மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

ஆனால், அவர் மகள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார், புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, “தனது தயார் உயிருடனே புதைக்கப்பட்டதாக” சிறுமி வாக்குமூலம் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள சுவாமுலுவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, குடும்ப பிரச்சனை காரணமாக கணவனே, மனைவியை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.