தன் அக்கா உடனான காதலை கைவிட மறுத்த காதலனை, காதலியின் தம்பி குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த தகவல் அந்த இளம் பெண்ணின் தம்பி மணிகண்டனுக்கு தெரிய வரவே, அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மணிகண்டன், தினேஷ்குமாரை நேரில் சந்தித்து, தன் அக்காவுடனான காதலை கை விடுமாறு எச்சரித்துள்ளார்.

அதற்கு தினேஷ்குமார் மறுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கடும் கோபமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் தினேஷ்குமாரை சராமாரியாக குத்தி உள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் தினேஷ்குமார் சரிந்து கீழே விழவே, மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால், கீழே விழுந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

இது தொடர்பாக விரைந்து வந்த கிணத்துக்கடவு போலீசார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர்.

இதனிடையே, பொள்ளாச்சி அருகே காதல் பிரச்சனையில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.