சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஜிஷ்ணு, அப்பகுதியில் போட்டோ கிராபராக இருந்து வருகிறார்.

இதனிடையே, அங்குள்ள துடியலூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சினிமாவில் நடிப்பது தொடர்பாக வாய்ப்பு கேட்பதற்கு ஈசியாக, அழகான போட்டோஸ் எடுக்க வேண்டும் என்று ஜிஷ்ணுவை அனுகி உள்ளார்.

இளம் பெண்ணின் சினிமா ஆசையை பயன்படுத்திக்கொண்ட அவர், அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அந்த பெண்ணும், காதலை ஏற்றுக்கொண்ட நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவற்றையெல்லாம், அந்த இளைஞர் போட்டோவாகவும், வீடியோகவும் எடுத்து வைத்துக்கொண்டார்.

இதனையடுத்து, அந்த வீடியோ மற்றும் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அந்த பெண்ணும், மானத்திற்கு பயந்து கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அவர் சில லட்சம் ரூபாய் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று அந்த பெண் கூறியுள்ளார். இதனால், அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மீண்டும் கடுமையாக மிரட்டி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜிஷ்ணுவை கைது செய்து, அவரிடமிருந்த புகைப்படங்கள், வீடியோ, அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் கேமரா என எல்லாவற்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர் இதுபோன்று இன்னும் எத்தனை பெண்களை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தார் என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.