கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கர்ப்பிணி மனைவியை, அவரது கணவர் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்து வந்த அனுப் - வந்தனா திவாரி தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இதனிடையே, வந்தனா தற்போது 5 மாதமாகக் கருவுற்ற நிலையில், அனுப் தன்னுடன் பணியாற்றும் பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பிலிருந்துள்ளார். கள்ளத் தொடர்பு காரணமாக, அனுப் பல நாட்கள் வீட்டிற்கே வராமல், அந்த பெண்ணுடன் தங்கி வந்துள்ளார்.

இது தொடர்பாக வந்தனா தன் கணவரிடம் கேட்டதால், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. சண்டை வரும்போதெல்லாம், அனுப் தன் மனைவியை கொலை செய்துவிடுவதாகக் கூறி, மிரட்டி அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, அனுப் - வந்தனா தம்பதியினர் 5 வது மாடியில் குடியிருந்த நிலையில், அவர்களுக்குள் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது, தன் கள்ளக் காதலியைத் திருமணம் செய்யத் திட்டமிட்ட அனுப், தன் நிறைமாத கர்பிணி மனைவியை 5 வது மாடியிலிருந்து, கீழே தூக்கி விசி கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தன் மனைவியுடன் சண்டை வந்தபோது, தன் மீது கோபத்தில் அவர் கொதிக்கும் தண்ணீரை ஊற்றிவிட்டு, மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார்.

ஆனால், வந்தனா திவாரியின் சகோதரர் கூறும்போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு, “எனக்கு அனுப் போன் செய்து, வந்தனாவை கூட்டி செல்லும்படி கட்டாயப்படுத்தியதாகவும், இல்லை என்றால், அவளைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். ஆனால், ஊரடங்கு காலம் முடிந்ததும் கூட்டிச் செல்வதாக நான் கூறிய நிலையில், வந்தனாவை அவரது கணவனே கொலை செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், அனுப் - வந்தனா தம்பதியின் 5 வயது மகனிடம் நடந்தது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, தொடக்கம் முதல், கடைசி வரை நடந்ததை ஒன்றுவிடாமல் சிறுவன் கூறியுள்ளான்.

அதன்படி, கணவனே தன் மனைவியை கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து, அனுப்பை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கர்ப்பிணி மனைவியை, அவரது கணவர் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.