சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, சென்னை அயனாவரம் அடுக்கு மாடிக் குடியிருப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணியாற்றி வந்த 17 பேர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், 17 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், 120 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 11 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.

இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு சிறையில் உயிரிழந்ததை அடுத்து, மீதமுள்ள 16 பேருக்கு எதிரான வழக்கில், கடந்த 1 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா அறிவித்தார். மேலும், “தோட்டக்காரர் குணசேகரன் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக” நீதிபதி கூறினார்.

இந்நிலையில், இந்த வழக்கின் தண்டனை விபரங்களை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா தற்போது அறிவித்துள்ளார்.

அதன்படி, குற்றவாளிகளான சுரேஷ், ரவிக்குமார், அபிஷேக், பழகி ஆகிய 4 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால், அவர்களுக்கு அபராதம் ஏதுமில்லை என்றும் நீதிபதி கூறினார்.

குறிப்பாக, இவர்கள் யாரும் நன்னடத்தை காரணமாக வெளியில் வர வாய்ப்பு இல்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அனைத்து குற்றவாளிகளும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.