கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர், முத்தமிழறிஞர், கலைஞர் மு.கருணாநிதியின் 97 வது பிறந்தநாள் நினைவு விழா, தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளில் ஆடம்பர நிகழ்ச்சிகள் வேண்டாம் என, திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் மிகவும் எளிமையான முறையில் பிறந்தநாள் விழாவை, திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி இன்று அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், திமுகவின் மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., கவிஞர் வைரமுத்து, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, “எல்லா வழிகளிலும் உச்சத்தைத் தொட்ட பன்முக அரசியல் தலைவர் கருணாநிதி” என்று புகழாரம் சூட்டினார்.

முன்னதாக, கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில், திமுக தொண்டர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, அந்த மணமக்களை மு.க.ஸ்டாலின் ஆசீர்வாதம் செய்து வாழ்த்து கூறினார்.