இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜி.எஸ்.டி. ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தான் இசை அமைக்கும் அனைத்து படைப்புகளுக்கும், அவரே உரிமையாளராக உள்ளார். ஆனால், சில படங்களின் உரிமையை, அந்தந்த பட தயாரிப்பாளர்களுக்கே வழங்கிவிட்டால், இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

இதனிடையே, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தன் படைப்புகளின் காப்புரிமையைப் பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரஹ்மான், இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும், அந்த மனுவில் “இசை தொடர்பான காப்புரிமையை, பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கிய பிறகு, அந்த காப்புரிமையின் உரிமையாளர்கள் பட தயாபரிப்பாளர்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளார். காப்புரிமையை வழங்குவது என்பது சேவை அல்ல என்பதால், சேவை வரி விதிப்பது தவறு” என்றும், அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்க்கு மார்ச் 4 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தார்.

அத்துடன், இது தொடர்பாக அடுத்த 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, ஜி.எஸ்.டி. ஆணையருக்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.