திரைக்கு வராத படத்தின் டிக்கெட்டை 6 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக நடிகர் ஆர்.கே. மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“ஜில்லா”, “எல்லாம் அவன் செயல்”, “அழகர் மலை” உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஆர்.கே.

நடிப்பு தொழில் மட்டும் இல்லாமல், "விஐபி கேர்" என்னும் ஆயுர்வேதப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலும் நடிகர் ஆர்.கே செய்து வருகிறார்.

இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், அங்குள்ள காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் ஆர்.கே. மீது மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், “நடிகர் ஆர்.கே. நடித்த “வைகை எக்ஸ்பிரஸ்” படத்தின் 600 டிக்கெட்டுகளை, தலா ஆயிரம் ரூபாய்க்கு விற்று மொத்தமாக, 6 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும், அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும் கோவிந்தராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் ஆர்.கே., “தன் மீது புகார் தெரிவித்துள்ள நபர், யார் என்றே எனக்குத் தெரியாது” என்றும் “உள்ளூரில் உள்ள லோக்கல் வினியோகஸ்தருடனான பிரச்சனையில், என்னை அவர் தேவையில்லாமல் இழுத்து விட்டுள்ளார்” என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இதனிடையே, இந்த மோசடி புகார் குறித்து விரைவில் நடிகர் ஆர்.கே.,விடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.