16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான சதீஷ்குமார், அருகம்பாளையம் பகுதியில் பெயிண்ட்டராக பணியாற்றி வந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பள்ளிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், சிறுமியைக் கடத்திய சதீஸ்குமார், அப்பகுதியில் உள்ள மறைவான இடத்தில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி, எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், அந்த காமுகன் கசக்கிப் பிழிந்த பிறகே, விடுவித்துள்ளான்.

இதனையடுத்து, அழுதுகொண்டே வீடு திரும்பிய சிறுமி, பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சதீஸ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி, நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, இதுவரை அனைத்து தரப்பு விசாரணைகளும், சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, அவருக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். பின்னர், சதீஷ்குமார் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.