மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க, தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லம் என்னும் பங்களாவில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு, அவர் வாழ்ந்து வந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதாக, தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தது.

இது தொடர்பான பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்றத் தமிழக ஆளுநர் ஒப்புதலுடன், தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

அதன்படி, வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் தற்போது முதல் அரசுடைமையாக்கப்படுகிறது.

இதற்காக, புரட்சித்தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதன், தலைவராக முதலமைச்சரும், துணைத் தலைவராகத் துணை முதலமைச்சரும் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, வீட்டில் உள்ள அசையும் பொருட்கள் அனைத்தும் அறக்கட்டளைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்கள், ஜெயலலிதா பயன்படுத்திய புத்தகங்கள், நகைகள் என அனைத்தும் நினைவிடத்தில் வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த அவசரச் சட்டம், நிரந்தர சட்டமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.