மாதாந்திர கடனை திரும்பச் செலுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் எந்திர உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, பொருளாதார ரீதியான சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி, வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் தனி நபர்கள் யாரும், 3 மாதம் EMI கட்ட தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.

அதேபோல், 100 பேருக்குக் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம், ஊழியர்கள் யாருக்கும் 3 மாதத்துக்கு பி.எப். கட்ட தேவையில்லை என்றும், அந்த தொகையை மத்திய அரசே செலுத்தும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் எந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன் விடுத்துள்ள கோரிக்கையில், “அனைத்து கட்டுமான இயந்திரங்கள் மற்றும் லாரிகளுக்கு, மாதாந்திர கடன் தவணை 3 மாத காலத்திற்கு விளக்கு அளிக்குமாறு” வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கொரோனா தாக்கம் காரணமாக, அனைத்து உள்கட்டமைப்பு, கட்டுமான துறை வேலைகளும் தடை ஏற்பட்டுவிட்டது. கொரோனா பாதிப்பு குறித்த நெருக்கடி, ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுமான தொழில் மந்தநிலை போன்ற பல்வேறு காரணங்களால், பெரும் பாதிப்பினை தாங்கள் சந்தித்திருப்பதாகவும், இதனால் மாதாந்திர கடன் தவணை மற்றும் EMI செலுத்துவதில் சிரமம் இருக்கும்” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

“இதுபோன்ற நெருக்கடி நிலைமைக்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சகத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய கடினமான சூழ்நிலையைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, EMI கள், மாதாந்திர தவணைகள் மற்றும் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு 3 மாத கால தடை அறிவிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“எவ்வித வருமானமும் இல்லாமல், வாங்கிய கடனை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுமாயின், உள்கட்டமைப்புத் தொழில் காலத்திற்கும் சரிசெய்ய முடியாத சேதத்தைச் சந்திக்கும் அபாய நிலை நிலவுவதாகவும்” அவர் கவலைத் தெரிவித்துள்ளார்.

“இந்த கடினமான நேரத்தில் இந்தத் துறைக்கு நிவாரணம் வழங்குமாறு மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் தமிழகத்தின் வாகன உரிமையாளர்கள் சார்பாகக் கோரிக்கை மனுவாக இந்த கடிதம்” அனுப்பப்பட்டுள்ளது என்றும் கத்திப்பாரா ஜனார்த்தனன் கூறியுள்ளார்.

மேலும், “இந்த கடிதத்திற்கு நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வாங்கி எந்த வித நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றும், “இது போல ஒவ்வொரு துறையும் பொருளாதார சவாலை எதிர்கொண்டால், நாட்டின் நிதிநிலை மற்றும் பொருளாதாரத்தில் மிக பெரிய தாக்கம் ஏற்படக் கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்” என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இதனால் மாதாந்திர கடன் செலுத்தி வரும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நிலையும் கேள்வி குறியாகவே உள்ளதாகவும், கத்திப்பாரா ஜனார்த்தனன் கவலையோடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.