சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால், தமிழகத்திலேயே அதிகபட்சமாகச் சென்னையில் 528 பேருக்கு கொரொனா தொற்று பரவி உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 145 பேருக்கும், திரு.வி.க. நகரில் 85 பேருக்கும், தடையார்ப்பேட்டையில் 65 பேருக்கும், தேனாம்பேட்டையில் 55 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 54 பேருக்கும், அண்ணாநகரில் 45 பேருக்கும் கொரோனா பரவி உள்ளது.

அதேபோல், வளசரவாக்கத்தில் 17 பேருக்கும், அடையாறில் 18 பேருக்கும், திருவொற்றியூரில் 14 பேருக்கும், ஆலந்தூரில் 9 பேருக்கும், பெருங்குடியில் 8 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும், அம்பத்தூரில் 2 பேருக்கும், மணலியில் ஒருவருக்கும் கொரோனா பரவி உள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா வைரசிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 63.98 சதவீதம் பேரும், பெண்கள் 36.02 சதவீதம் பேரும் உள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 109 பேருக்கும், 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 109 பேருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக 80 வயதுக்கு மேல் 9 பேருக்கும், 9 வயதுக்குக் கீழ் 13 பேருக்கும், 10 முதல் 19 வயதுள்ளோர் 42 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 91 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 81 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 48 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.