உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த வாரம் இந்தியாவில் நுழைந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது,

ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து தமிழகம் திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது கட்டுமான தொழிலாளி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், அவரின் ரத்த பரிசோதனை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கும், பின்னர், புனேவில் உள்ள ஆய்வகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், ஓமனிலிருந்து சென்னை வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவருடன் விமானத்தில் வந்த 27 பேருக்கும், பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், அமெரிக்காவிலிருந்து தோஹா வழியாகச் சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விமான நிலைய மருத்துவக்குழுவானர் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த சிறுவனைச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைஸ் எதிரொலியாக, குவைத்திலிருந்து சென்னை வந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள்; குவைத் - சென்னை விமான சேவையை ரத்து செய்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக, விமான நிலையத்தில் மருத்துவக்குழு தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பல்வேறு நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்த ஆயிரத்து 80 பேரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைஸ் பரவத் தொடங்கி உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறி்து, பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி, சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

அத்துடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதனிடையே, கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியாவில் கொரோனா வைரசுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 39 ஆக உயர்ந்துள்ளது.