கொரோனா அச்சுறுத்தல் சூழல் நிலவுவதால், பாதுகாப்பான உடலுறவுக்கு சில விசயங்களைப் பின்பற்ற வேண்டும் என்று வெளிநாட்டு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கொரோனா தாக்கம் காரணமாக, உலக மக்கள் அனைவரும் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால், இதுவரை அலுவலகம், வெளி உலகம் என்று ஊர் சுற்றிய ஆண்கள் எல்லாம், ஊரடங்கு உத்தரவால், பொட்டி பாம்பாக வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

இதுவரை ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் ஒரு நாள் மட்டும் தம்பதிகள் ஒன்றாக ஒரே வீட்டிலிருந்த வந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாகத் தொடர்ந்து 21 நாட்கள் எந்த வேலையும் இல்லாமல் கணவன் - மனைவி இருவரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ரொமன்ஸ் அதிகரித்துள்ளது. கூடவே, நெருக்கமும் அதிகரித்துள்ளது.

ஆனால், தமிழக அரசோ கொரோனாவின் தாரக மந்திரமாக “ விலகியிரு! விழித்திரு!! வீட்டிலிரு!!!” என்று கூறி வருகிறது. தமிழக அரசு சொல்வது போல், தம்பதிகள் அனைவரும் வீட்டிலிருக்கிறார்கள், விழித்திருக்கிறார்கள், ஆனால், விலகியிருக்க முடியாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாகத் தான், வெளிநாடுகளைப் போலவே இந்தியாவிலும் கொரோனா மாஸ்க் விற்பனைக்கு இணையாக, ஆணுறை விற்பனையும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதேபோல், கொரோனா உடலுறவின் மூலம் பரவுமா என்பது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை என்று மருத்துவர்களே தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் தம்பதிகள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில் பாதுகாப்பாக தங்களது துணையுடன் இணைய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி, தாம்பத்தியத்தில் முத்தம் மட்டுமே போதும் என்றும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கணவன் - மனைவிக்குள் மட்டும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக, வெளியே சென்று யாரும் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும், உங்கள் துணைக்கு உடல் நிலை சரியில்லை என்றால், உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், கொரோனா அறிகுறிகள் மற்றும் இருமல், காய்ச்சல் இருப்பது போல் உணர்ந்தாலும், கொரோனா வைரசில் குணமடைந்தவர் அனைவரும் உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல், தாம்பத்தியம் வைத்துக்கொள்வதற்கு முன்பும், பின்பும் உடனே குளிப்பது நல்லது என்றும், செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துபவர்கள் அவற்றைக் கிருமி நாசினி கொண்டு கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும் என்றும், ஆணுறை மற்றும் கருத்தடை விஷயங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.