தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 621 பேராக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறலால் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த மாதம் 20 ஆம் தேதி திருச்சிக்கு ரயில் மூலம் சென்று வந்தது தெரியவந்தது. இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று வரை 571 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 48 பேர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும், மீதமுள்ள 2 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 621 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தமிழகம் முழுவதும் அவரவர் வீடுகளில் சுமார் 91,851 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசின் தனிமை முகாம்களில் 205 பேர் உள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 8 பேர், வீடு திரும்பி உள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.