கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 15 வது இடம் பிடித்துள்ளது.

உலகமே கொரோனா என்னும் ஒற்றை சொல் மந்திரத்தில் முடங்கிக் கிடக்கிறது. இதனைத் தடுக்க மருந்து இல்லை. கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை விட்டால், வேறு வழியில்லை என்ற நிலையில் தான், ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒரே கோட்டில் பயணிக்கிறது.

இந்நிலையில், உலக அளவில் எந்தெந்த நாடுகள் எவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது, எந்த நாடுகள் மீண்டுள்ளது, எந்த நாடுகளில் மருத்துவம் முறையாக அளிக்கப்படுகிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

இது குறித்து, Deep Knowledge group என்ற சர்வதேச நிறுவனம், ஆய்வு மேற்கொண்டது. அதில் ஊரடங்கை சரியாகப் பின்பற்றல், நோய் கண்காணிப்பு, நோயைக் கண்டறிதல், அரசின் நடவடிக்கை மருந்து விநியோகம் மற்றும் அவசரத்தை எதிர்கொள்வது ஆகியவற்றில் ஒவ்வொரு நாடும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகிலேயே, கொரோனா பாதிப்பின் அபாயம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில், ஐரோப்பிய நாடுகள் வரிசை கட்டி நிற்கின்றன.

குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இத்தாலி முதல் இடம் பிடித்துள்ளது.

பலம் பொருந்திய உலக வல்லரசு நாடான அமெரிக்கா, 2 வது இடம் பிடித்துள்ளது. அமெரிக்காவில், கடந்த 10 நாட்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

3 வது இடத்தில், இங்கிலாந்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 4 வது இடத்தில் ஸ்பெயின், 5 வது இடத்தில் பிரான்ஸ், 6 வது இடத்தில் ஸ்வீடன் நாடுகள் வரிசையாக இடம் பெற்றுள்ளன.

7வது இடத்தில் ஈரான், ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் 9 வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா 15 வது இடத்தை தற்போது பிடித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 24,608 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 782 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக, மஹாராட்சிராவில் 6,817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 301 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேபோல், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,749 லிருந்து 5,063 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில், முதன் முதலாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இயல்பு வாழ்க்கை தற்போது திரும்பி வருகிறது.

அதேபோல், கொரோனா பாதிப்பு பரவும் ஆபத்து குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில், இஸ்ரேல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

2 ஆம் இடத்தில் ஜெர்மனியும், 3 வது இடத்தில் தென்கொரியாவும் இடம் பெற்றுள்ளன.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து, தாய்வான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது.

அதற்கு அடுத்த படியாக ஆசிய நாடுகளான சீனாவும், தென்கொரியாவும் இடம் பிடித்துள்ளன. அதனைத்தொடந்து ஆஸ்திரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்வான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன.

அதேபோல், கொரோனா பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்துப் பாதுகாப்பதில் ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. 2 வது இடத்தில் உலக வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இதனைத்தொடர்ந்து ஜப்பான், பிரிட்டன், ஆஸ்திரியா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.