தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதால், மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு அடுத்த யாதகிரி மாவட்டம் அமலகாலா கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், யாதகிரியில் உள்ள ஒரு கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இதனிடையே, கடந்த 21 ஆம் தேதி அவர் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள கெம்பாவி கிராமத்தைச் சேர்ந்த ராஜண்ணா சாவண்ணா, தேவேந்திரப்பா, மகேஷ், அனில்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து, மாணவியைக் கடத்திச் சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, 4 பேரும் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நடக்க முடியாமல் வீடு திரும்பிய மாணவி, அழுது கொண்டே தனக்கு சேர்ந்த பாலியல் அவலங்களை தன் பெற்றோரிடம் கூறி கதறி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அங்குள்ள சுரபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான 4 பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், 4 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதால், மனமுடைந்த மாணவி, வீட்டில் விஷம் குடித்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், இந்த வழக்கில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தலைமறைவான 4 பேரில் ராஜண்ணா, தேவேந்திரப்பா ஆகிய 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தலைமறைவாக உள்ள மகேஷ், அனில்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.