தமிழக சட்டசபையிலேயே மு.க.ஸ்டாலினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலாய்த்த நிகழ்வு வைரலாகி வருகிறது.

கடந்த 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை குறித்து, விவாதம் நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, திமுக பொருளாளர் துரைமுருகன் எழுந்து, “தமிழக அரசின் கடன் சுமை 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக” சுட்டிக் காட்டினார்.

மேலும், “எனது கவலையெல்லாம், அடுத்த முறை திமுக ஆட்சி அமைத்ததும், தங்கள் தலைவர் ஸ்டாலின் எப்படி அதை சமாளிப்பார் என்பது தான்” என்று, துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கேள்விக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பதில் அளித்தார்.

அப்பொழுது, “உங்களுக்கு அந்த கவலை வேண்டாம், காரணம், அப்படி ஒரு நிலை உங்களுக்கு வராது” என்று கூறினார். இதனால், சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது. அப்போது, திமுக உறுப்பினர்களின் முகம் சிவந்துபோனது.

இதனிடையே, நேற்றைய தினம் “ஓ.பி.எஸ். மாடு பிடித்தாரா? ஜல்லிக்கட்டு நாயகன் ஆனது எப்படி?” என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியதால், தமிழக சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. இந்நிலையில், அதை திருப்பி செலுத்தும் வகையில், இன்று சட்டசபையிலேயே மு.க.ஸ்டாலினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.