பிகில் பட வசூல் விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை தொடர்பாக, நடிகர் விஜயின் ஆடிட்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நடிகர் விஜய், பிகில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 38 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த வாரம் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், 77 கோடி ரூபாய் பணமும், பல்வேறு சொத்து தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, நடிகர் விஜய், தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.

அந்த சம்மனில், அடுத்து வரும் முதல் 3 நாட்களில் நேரில் ஆஜராக அவர்கள் 3 பேருக்கும் உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், முதல் 2 நாட்கள் 3 பேர் தரப்பிலும் யாரும் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கடைசி நாளான நேற்று நடிகர் விஜயின் ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதேபோல், சினிமா பைனான்சியர் அன்புசெழியனின் ஆடிட்டரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மேலும், சோதனையின் கைப்பற்றப்பட்ட பணம், மற்றும் ஆவணங்கள் தொடர்பாகவும், பிகில் பட வசூல் விவகாரம் தொடர்பாகவும் அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.