அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார்.

டொனால்டு டிரம்ப், அரசு முறை பயணமாக தனது குடும்பத்தினருடன், இந்தியாவின் ஆமதாபாத் விமான நிலையம் வந்து இறங்கினார். அவருடன், ட்ரம்ப்பின் மனைவி மெலனியா, டிரம்பின் மகள் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

இந்தியா வந்த ட்ரம்ப்பை, அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து, கை குலுக்கி, கட்டி அணைத்தும் வரவேற்றார்.

அப்போது, இந்தியா சார்பில் ட்ரம்ப்க்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும், சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதனை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார்.

மேலும், அதிபர் டிரம்பை வரவேற்க அகமதாபாத் நகரில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றையும், அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டு ரசித்தனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி, ஆமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா மைதானத்தில், பல ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதலே அங்குக் கூடியுள்ளனர்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருப்பது, டிவிட்டரில் ட்ரெண்டிங்கானது குறிப்பிடத்தக்கது.