ஒருதலைக் காதலால் வகுப்பறையில் புகுந்து, பள்ளி ஆசிரியரைக் கல்லூரி மாணவர் ஒருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ரம்யா என்ற இளம் பெண் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

Cuddalore college student kills school teacher

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற கல்லூரி மாணவர், ரம்யாவை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. 

தினமும் ரம்யா பின்னாடியே தொடர்ந்து வந்த ராஜசேகர், தன்னுடைய காதலை அவரிடம் கூறியதாகவும், ஆனால் அதை ஏற்க அவர் மறுத்ததாகவும் தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், நேற்றைய தினம் பள்ளி தொடங்கும் முன்பு, பள்ளியின் வகுப்பறைக்கே வந்துள்ளார். அங்கு ரம்யா சில மாணவிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரம்யாவை சராமாறியாகத் தாக்கிவிட்டு, ராஜசேகர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரம்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

Cuddalore college student kills school teacher

இதனால், சக மாணவிகள் சத்தம் போட்டு, அலறித் துடித்துள்ளனர். இதனையடுத்து, பக்கத்து அறையிலிருந்த ஆசிரியர்கள் ஓடிவந்து ரம்யாவை பார்த்துவிட்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், ரம்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ராஜசேகரை தேடி வருகின்றனர்.

இதனிடையே, பள்ளி வகுப்பறையிலேயே இளம் ஆசிரியர் ஒருவர் ஒருதலைக்காதலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.