திருமண நாள் அன்று வித்தியாசமாக நிகழ்ச்சியை நடத்த ஆசைப்பட்டு உயரமான ஊஞ்சலில் இருந்து மணமக்கள் கீழே விழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தற்போது திருமண சீசன் களைகட்டியுள்ளது. முன்பை காட்டிலும் தற்போது திருமணத்திற்கு தயாராகும் தம்பதிகள் தங்கள் திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றும் முயற்சியில் வித்தியாசமாக திருமண நாளில் ஏதேனும் செய்ய முயற்சிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

திருமண மேடைகளில் உறவினர்களை காட்டிலும் மணமகன் மற்றும் மணமகள் முன்னணியில் இருப்பதற்காக தேர்களிலும், சுழலும் மேடைகளிலும், ஊஞ்சல்களிலும், ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதன் மூலமும் தங்கள் திருமண அரங்குகளில் பிரம்மாண்டமாக நுழைய ஆசைப்படுவதும் அண்மையில் நடைபெறுகிறது.

இவ்விதம் மண மேடையை பிரம்மாண்டமாக வடிவமைப்பதன் மூலம் மணமகனும், மணமகளும் அந்நாளை மறக்க முடியாத நாளாக மாற்றி தங்கள் திருமண நாளை மகிழ்ச்சியானதாக வைத்து கொள்கின்றனர்.

இந்த வித்தியாச முயற்சியில் சில திருமண நிகழ்வுகள் சினிமாவை மிஞ்சும் வகையிலும் அமைந்துள்ளது. இப்படி அமையும் திருமண நிகழ்வுகள் சில சமயங்களில் வரவேற்பையும், சில சமயங்களில் விமர்சனங்களையும் பெற்று வருகின்றன.

இதேபோல் திருமண நாளை சற்று வித்தியாசமாக செய்ய முயற்சித்து இறுதியில் விபரீதத்தில் முடிந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த வீடியோவில் திருமண ஜோடியை வரவேற்க பின்னணி நடனக் கலைஞர்கள் நடனம் ஆடும்போது மேடையில் பட்டாசு வெடித்து எரிகிறது. மணமகனும், மணமகளும் தங்கள் திருமண நாளில் ஓவல் ஸ்விங் போன்று வட்ட வடிவில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் ஏறி நிற்கின்றனர். பின்னர் மெதுவாக பிரம்மாண்ட மேடைக்கு மேலே அந்த ஊஞ்சல் மெல்ல மெல்ல ஏறுகிறது.

அந்த ஊஞ்சலில் மணமக்கள் உற்சாகத்துடன் கைகோர்த்தப்படி 12 அடி உயரத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரவிதமாக திடீரென்று மணமக்கள் நின்று கொண்டிருந்த ஊஞ்சல் சரிந்து விழுந்தது. மகிழ்ச்சியாக அமைய வேண்டிய திருமண நிகழ்வு சற்று நேரத்தில் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துவிட்டது.

மெல்ல மெல்ல உயரே சென்ற ஊஞ்சல் திடீரென அறுந்துவிழ, கிட்டத்தட்ட அந்தரத்தில் இருந்து மணமக்கள் கீழே விழுந்தனர். தம்பதிகள் கீழே விழுந்ததால் விருந்தினர்கள், தம்பதியினரின் உறவினர்கள் உள்ளிட்டோர் அலறியடித்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடத் தொடங்கினர்.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. எனினும் மணமகனும், மணமகளும் லேசான காயம் அடைந்தனர். இதனால் மேடையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கீழே விழுந்தவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தனர்.

விபத்திற்கு பிறகு தம்பதிகள் தங்கள் திருமண சடங்குக்கு சென்றனர். சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் துவங்கிய திருமணச் சடங்கில் மணமக்கள் கலந்துகொண்டனர். இந்த சம்பவத்திற்கு திருமணை விழாவை ஏற்பாடு செய்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பொறுப்பேற்று தம்பதிக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

Unfortunate accident at Raipur Wedding yesterday.
Thank God all are safe.
source : https://t.co/yal9Wzqt2f pic.twitter.com/ehgu4PTO8f

— Amandeep Singh 💙 (@amandeep14) December 12, 2021