உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் வரை ஓயமாட்டேன் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள்.

மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இன்று 5-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இது தொடர்பாக அடுத்தடுத்து உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளை தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்து வரும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் வரை ஓயமாட்டேன் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.