முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்கள், 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள பிபின் ராவத் வீட்டிற்கு அவரது உடல் மற்றும் அவரது மனைவி உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்ட்வியா, ஸ்மிருதி இரானி, சர்பானந்தா சோனவல், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், டெல்லி ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி, பா.ஜ., தலைவர் நட்டா, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, அக்கட்சி மூத்த தலைவர் ஹரிஸ் சிங் ராவத், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, முன்னாள் அமைச்சர் அந்தோணி, பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனியன், இஸ்ரேல் தூதர் நயோர் கிலான், தி.மு.க., எம்.பி.,க்கள் ராசா, கனிமொழி ,பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரணி ஆகியோரும், பெற்றோரின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதி ஊர்வலம் காமராஜ் மார்க் பகுதியில் தொடங்கியது.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் வருகை தந்தனர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலத்தில் தேசிய கொடி ஏந்தி பொதுமக்கள் விண்ணை முட்டும் அளவிற்கு முழக்கமிட்டே வந்தனர்.

சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முப்படைகளின் தளபதி பிபின் ராவத்திற்கு மக்கள் பிரியா விடை அளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை முறியடித்த பிபின் ராவத்திற்கு பொதுமக்கள் தங்களது இறுதி நன்றி கடனாக வீட்டில் இருந்து தொடங்கி மயானம் வரை வழிநெடுக தேசிய கொடி ஏந்தி பாரத்... மாதா... கி ஜே... வந்தே மாதரம்...என கூறி அவருக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்தில் மக்கள் வழிநெடுகிலும் ரியல் தளபதிக்கு மலர்தூவி தங்களது அஞ்சலியை செலுத்தினர். பிபின் ராவத்தின் சொந்த மாநிலமான உத்தரக்கண்டில் இருந்து பலர் வருகை தந்து வீரதிருமகன் முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர். வாகனம் முன் வாத்தியங்களுடன், இசைக்கருவிகளுடன் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.

டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் பரார் சதுக்கத்தில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்து, பிரான்ஸ் தூதர்கள், இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேசம் ராணுவ தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலி நிகழ்வில் பிபின் ராவத்தின் இரு மகள்கள், குடும்பத்தினர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரக்காண்ட் முதல்வர் புஷ்கர் சிங், ராணுவ அதிகாரிகள் உள்ளிடோர் இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர். இறுதி அஞ்சலியில் இசை அஞ்சலி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடலுக்கு அவரது மகள்கள் இறுதிச்சடங்குகளை தங்களது பெற்றோருக்கு கண்ணீர் மல்க செய்தனர். பின்னர் கன்டோன்மென்ட் மயானத்தில் பிபின் ராவத் மற்றும் மனைவி மதுலிகா ராவத் உடல் தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டது. பிபின் ராவத் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு அவரது மகளிடம் முறைப்படி ராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

பின்னர் தகன மேடையில் பிபின் ராவத் உடலுக்கு மற்றும் தாய் மதுலிகாவிற்கும் அவரது மகள்கள் இறுதி சடங்குகளை செய்தனர். தொடர்ந்து ஒரே தகன மேடையில் பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் வைக்கப்பட்டன. அதன் பின்னர் பிபின் ராவத், அவரது மனைவி உடலுக்கு மகள்கள் தீ மூட்டினர். அப்போது முழு ராணுவ மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதையுடன் பிபின்ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது.