டெல்லியில் கார் மீது கார் மோதியதற்கு, பழிக்குப் பலியாக 15 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Theeran Adhigaaram movie style Delhi shop robbery

டெல்லி பஞ்சாபி பாக் அருகே, மளிகைக் கடை வைத்து நடத்தும் உரிமையாளர், தனக்கு முன்னே சென்ற காரை எதிர்பாராத விதமாக மோதியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, காரை மோதியவரை பின் தொடர்ந்து சென்றதில், அவர் மளிகைக் கடை வைத்து நடத்தும் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இரவு நேரத்தில் கடையின் உரிமையாளர், வியாபாரத்தை முடித்துவிட்டு கணக்கைச் சரிபார்த்துவிட்டு, கடையை மூட நினைத்துள்ளார். அப்போது, திடீரென்று கடைக்குள் புகுந்த சிலர், கடையின் உரிமையாளர் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திவிட்டு, கடையில் கணக்குப் பார்த்து வைத்திருந்த 15 லட்சம் ரூபாயை அபகரித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த கடைசியின் உரிமையாளர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அதே பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் இதேபோன்று பலரிடமும் வாடிக்கையாக வழிபறியில் ஈடுபட்டு வருவதாகவும், தாக்குதலிலிருந்து மீண்ட மளிகைக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கடைக்குள் புகுந்த தாக்குதல் நடத்தி 15 லட்சம் ரூபாயைத் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.